பி.எஸ்.எப் வீரர்களை குறைகூறும் மமதா

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்கள், மாடு கடத்தல் வழக்கு, பணப் பரிமாற்ற மோசடி, ஊழல் போன்ற பல வழக்குகளில் தொடர்ந்து கையும் களவுமாக சிக்கி வருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி, மாடு கடத்தல் வழக்கை மறைக்க, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அதேபோல ஒரு நிகழ்வாக, மாநில செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையோரம் வசிக்கும், அவர்களின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மீது அட்டூழியங்களைச் செய்து வருவதாக அறிந்தேன். சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது எல்லைப் பாதுகாப்புப் படையின் வேலையல்ல. மாடுகள் காணாமல் போனால், அவர்கள் திருணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப் போடுவார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், “பசுக்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சருக்கு உள்ளது. மேற்கு வங்காளத்தில் மற்ற இடங்களிலிருந்து பசுக்கள் எப்படி வருகின்றன? எங்கள் மாநிலத்தில் இதுபோன்ற கடத்தலை நாங்கள் விரும்பவில்லை. உத்தரப் பிரதேசத்தில் இருந்து மேற்கு வங்க எல்லைக்கு மாடுகளை அனுப்பிவிட்டு, பசு கடத்தல் தொடர்பாக எங்கள் கட்சியினர் மீது பழி சுமத்துவது ஏன்? இது நகைச்சுவையா? இதுபோன்ற சதிகள் பற்றி நான் அனைவரையும் எச்சரிக்க விரும்புகிறேன். சர்வதேச எல்லையில் இருந்து மா நிலத்தின் 50 கி.மீ பகுதிக்கு அப்பால் பி.எஸ்.எப் வீரர்களை நுழைய அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்து, மக்களைக் கொன்று, மறுபுறம் வீசுகிறார்கள். எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும் போது, மாநில காவல்துறையை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்ல பி.எஸ்.எப்பைக் கேளுங்கள். மேற்கு வங்காள முதல்வர் பி.எஸ்.எப் அமைப்பு, தேர்தலில் பா.ஜ.கவுடன் இணைந்து சதி செய்கிறது” என பழி சுமத்தினார்.