பிர்சா முண்டா

பழங்குடியின மக்கள் கடவுளாகப் பார்க்கும் தேசவிடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் நினைவு நாள் இன்று.

நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல்வேறு விஷயங்கள் திட்டமிட்ட ரீதியில் மறைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பிர்சா முண்டாவின் சுதந்திர போராட்டம். சந்தால் மற்றும் முண்டா பழங்குடி மக்களின் போராட்டங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சோட்டா நாக்பூர் வனப்பகுதியில் பிர்சா முண்டா தலைமையில் நடைபெற்ற பழங்குடி மக்களின் தீரமிக்க போராட்டங்கள் தனித்து பேசத்தக்கவை.

சோட்டா நாக்பூர் வனப்பகுதியையும் அவற்றில் பொதிந்திருக்கும் வளங்களையும் கண்ட ஆங்கிலேய அரசு மெல்ல தனது அதிகாரத்தின் எல்லையை வனத்திலும் நுழைத்தது. நிலப்பிரபுக்கள், கந்து வட்டிக்காரர்கள் துணையுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு அநியாய வரி விதித்து அபகரித்தது ஆங்கிலேய அரசு. கூடவே வனச் சட்டங்கள் எனும் பெயரில் ஒட்டு மொத்த காட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தங்களது பாரம்பரிய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்த முண்டா பழங்குடியினர் காட்டை விட்டு விரட்டப்பட்டனர். நிர்கதியாக அலைந்து பஞ்சத்தால் பலர் உயிரிழந்தனர்.

இப்படி வஞ்சிக்கப்பட்ட முண்டா பழங்குடி மக்களை ஒன்று திரட்டி “நீர் நமது, நிலம் நமது, வனம் நமது, பழங்குடிகளாகிய நாமே இதை ஆள்வோம்” என்ற முழக்கத்தால் ஒன்றுதிரட்டி சுதந்திர உணர்ச்சியை விதைத்தார் பிர்சா முண்டா. பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமான இது நடந்தது 1895ல். அப்போது பிர்சாவின் வயது வெறும் 19 தான்.

பிர்சாவின் தீர்க்கமான பேச்சும், போர்க்குணமும் கண்டு மக்கள் அவரது பின்னால் இயல்பாக ஒன்று திரண்டனர். பழங்குடிகளின் வில், அம்பு ஆயுதங்களுடன் மரபார்ந்த போர்முறை, காட்டில் மறைந்திருந்து தாக்கும் முறைகளை பயன்படுத்தி போரிட்ட பிர்சாவின் உத்திகள் ஆங்கிலேயர்களை மிரள வைத்தது. இடையே பிர்சாவை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்து பல்வேறு கொடுமைகள் செய்தது ஆங்கிலேய அரசு. விடுதலை செய்யப்பட்ட பிர்சா, அதே பழைய உத்வேகத்தோடு விடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.

சமரசமற்ற தங்களது நில போராட்டத்திற்கு இடையே பழங்குடிகளின் கிறித்தவ மதமாற்றம் தங்களது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதாகவும் சாடினார் பிர்சா முண்டா.

இறுதியாக 1900 ஜூன் 8ல் கைது பிர்சா செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் அருந்தும் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டது. அதனைப் பருகியதால் மறுநாள் காலையில் உயிரிழந்தார். ஆனால் அவர் காலராவால் இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. மக்கள் அதனை நம்பவில்லை. அப்போது அவரது வயது 25. முண்டாக்களையும் கடந்து இதர பழங்குடி இன மக்கள் அனைவரும், காட்டில் தவழும் காற்று, ஓடைகள், மரங்கள், மலைகள் என அனைத்திலும் அவரது ஆன்மா உள்ளதென பாடுகிறார்கள்.

பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறவும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும் நவம்பர் 15ம் தேதியை, ‘ஜன்ஜாதிய கௌரவ்’ தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்