பா.ஜ., கூட்டணியில் உறுதியாக உள்ளேன் : சந்திரபாபு நாயுடு

ஆந்திர சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9ல் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லோக்சபா தேர்தலில் 16 தொகுதிகளில் வாகை சூடியிருந்தது. இதனால் அவரது ஆதரவை எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி பெற திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே இன்று (ஜூன் 5) மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ) கூட்டத்தில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு டில்லி செல்ல உள்ளார்.

டில்லி புறப்படுவதற்கு முன்னர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி மக்களுக்கான வெற்றி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பெருமளவு பிரச்னைகளை சந்தித்தனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லிக்கு செல்ல இருக்கிறேன்.

என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றினோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.