தேசிய ஜனநாயக கூட்டணியின் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடந்துவருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

அமித் ஷா பேசுகையில், “பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் விருப்பம் மட்டுமல்ல. இது நாட்டிலுள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தும் நாட்டின் குரல்” என்று தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு பேசுகையில், “தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். தேர்தல் பிரசாரத்தின் போது 3 மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வே எடுக்கவில்லை. இரவு பகலாக பிரசாரம் செய்தார். எந்த உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினாரோ அதே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை முடித்தார். ஆந்திராவில் நாங்கள் 3 பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒரு பெரிய பேரணியை நடத்தியுள்ளோம். இது ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் முன்னெடுப்புகளை செய்தது. நரேந்திர மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறார். அதுதான் நரேந்திர மோடி. இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

கடந்த நான்கு தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக நரேந்திர மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. அவரது தலைமையில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை எட்டியுள்ளோம்.

இப்போது, ​​இந்த ஆட்சியில் அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். மோடி தலைமையில், உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் பெறப்படுகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரது தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள்.” என்றார்.

நிதிஷ் குமார் பேசுகையில், “பிஹாரில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். ஞாயிற்றுக்கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தொடர்ந்து மக்களவை பாஜக தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.