தெய்வீக முதலை பபியா

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் வசித்து வந்த 75 வயது மதிக்கத்தக்க தெய்வீக முதலையான பபியா உயிரிழந்தது. 1945ம் ஆண்டில், ஒரு ஆங்கிலேய அதிகாரி அக்கோயிலில் ஒரு முதலையை சுட்டுக் கொன்றார். சில நாட்களில் பபியா அந்த கோயில் குளத்தில் தோன்றியது என்று கூறப்படுகிறது. அந்த முதலை முற்றிலும் சைவ உணவை மட்டுமே உண்ணும். காலை, மதியம் பிரார்த்தனைக்குப் பிறகு அதற்கு உணவு வழங்கப்படும். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பிறப்பிடம் அனந்த பத்மநாபசுவாமி என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலில் தெய்வீக முதலையான பபியாவுக்கு பிரசாதம் அளிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். பக்தர்கள், பிரசாதத்தை அர்ச்சகரிடம் கொடுத்த பிறகு, அவர் ஏரியில் சென்று அதனை பபியாவுக்குக் கொடுப்பார். பபியாவும் குளத்திலிருந்து வெளியே வந்து அதை சாப்பிடும். பபியா அந்த குளத்தில் யாருக்கும் எந்த தீங்கு செய்ததில்லை. என்னதான் குளத்தில் இருந்தாலும் அதில் உள்ள மீன்களை உண்ணாது. இதனால் இதற்கு சைவ முதலை என்ற பெயரும் உண்டு.அனந்தபத்மநாப சுவாமியை பபியா காப்பதாக பக்தர்கள் நம்பினர். அதன் மறைவு செய்தி பரவியவுடன், சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள், திரளாக வந்து அதற்கு அஞ்சலி செலுத்தினர்.திருக்கோயில் சார்பில் மாலைஅணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்த பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சனாதன தர்மத்தில் பக்தியுடன் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்குக்கூட தனி மரியாதை உண்டு.