திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் போப்பிற்கு கடிதம்

திருவாங்கூர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான இளவரசி கௌரி பார்வதி பாய் மற்றும் இளவரசி கௌரி லக்ஷ்மி பாய் ஆகியோர், தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியது குறித்து போப் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், திருவாங்கூர் முன்னாள் மகாராஜா ஸ்ரீஆனிசோம் திருநாள் மார்த்தாண்டத்திற்கு எதிரான தொடர் பிரச்சாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்த பல்வேரு வரலாற்று உண்மைகளை மேற்கோள் காட்டி, முன்னாள் மன்னர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா மற்றும் திருவாங்கூர் ராஜ்ஜியத்திற்கு எதிரான எதிர்மறையான குறிப்புகள் குறித்து பதிவை சரிசெய்யுமாறு அரச குடும்பத்தினர் போப் பிரான்சிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அப்பகுதி மக்கள், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாறிய காரணத்திற்காகவும், தீண்டாமையை எதிர்த்தமைக்காகவும், கிறிஸ்தவத்தைப் பரப்பியதற்காகவும் நட்டாலம் நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையை ஹிந்து மன்னர் சுட்டுக்கொன்றார் என்று கூறி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்ஸிஸ் வழங்கினார். கிறிஸ்தவர்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புனிதர் பட்டம் வழங்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால், மதமாற்றம் செய்ததற்காக தேவசகாயம் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஆதாரமற்ற புனைவை வரலாறாக நிறுவுவதற்காக திட்டமிட்டே இந்தப் புனிதர் பட்டமளிப்பு நடைபெற்றது. திருவிதாங்கூர் வரலாற்று புத்தகங்களிலும் குறிப்பாக நாகம் ஐயாவின் திருவிதாங்கூர் வரலாற்றிலும், கிறிஸ்தவ புத்தகங்களிலும் இது ஆதாரமற்ற புனைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவசகாயம் பிள்ளை 1752ல் கொல்லப்பட்டார் என்று கத்தோலிக்க வரலாறு சொல்கிறது. ஆனால், 1774ல் கிறிஸ்தவர்களுக்குப் பேருதவி செய்தது திருவிதாங்கூர் என்று போப் க்ளமெண்ட் –  14 கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்த அடக்குமுறையும் நடக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் கொடுப்பதற்கான காரணங்களை விவரிக்கும் கிறிஸ்தவ வலைத்தளங்களில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதன் வாயிலாக தென்தமிழகம், தெற்கு கேரளம், வடக்கு இலங்கைப் பகுதிகளில் கிறிஸ்தவம் வளரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாகலாந்து, மிசோரம் பகுதிகள் போல் பாரதத்தின் தென் பகுதிகளையும் கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாக உருவாக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை. இந்த முயற்சி முழு ஹிந்து சமுதாயத்தையும் குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஹிந்துக்களையும் அவமதிக்கும் செயல்’ என வேதனை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.