தாக்கரே குடும்ப அரசியல்

சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சட்டரீதியாக போராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான நிகார் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகார் தாக்கரேவின் தந்தை பிந்துமாதவ் தாக்கரே, சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேவின் மூத்த மகன் ஆவார். அதன்படி நிகார் தாக்கரே அவருடைய பேரன் ஆவார். பிந்துமாதவ் தாக்கரே, 1996ல் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். பிந்துமாதவ் தாக்கரேக்கும் அவருடைய மகனுக்கும் அரசியலில் பெரிதாக ஆர்வமில்லை என்று கூறப்பட்ட நிலையில், நிகார் தாக்கரே உத்தவ் தாக்கரேவை எதிராக முடிவெடுத்திருப்பது அங்கு அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதேபோல, பால் தாக்கரேவின் இன்னொரு மகனான ஜெய்தேவ் தாக்கரேவின் முன்னாள் மனைவியும் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். நிகார் தாக்கரேவின் மனைவியின் தந்தை ஹர்ஷ்வர்தன் பாட்டில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.