1925-ம் வருடம் விஜயதசமி அன்று நாகபுரியில் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை ஆரம்பித்தார். தன்னம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்தை தட்டி எழுப்பி தேசிய கண்ணோட்டத்துடன் ஒற்றுமைபடுத்தும் நாடு தழுவிய இயக்கம் ஒன்றை உருவாக்குவதை பரமபூஜனீய டாக்டர்ஜி தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு அடுத்த 15 வருடத்திற்குள் அனேக மாநிலங்களிலும் அவரால் சங்க ஷாகாக்கள் ஆரம்பிக்க முடிந்தது.
அதற்கு அவருடைய தீவிரமான நாட்டுப்பற்றும் அசாதாரண செயல் திறனும்தான் காரணம். 1940-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி அன்று அவர் காலமாகிவிட்டார். அதே வருடம் மே மாதத்தில் நாகபுரியில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்காவில் பேசும் பொழுது, ‘நான் என் முன்னால் ஹிந்து ராஷ்டிரத்தின் சிறிய வடிவத்தை பார்க்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். அந்த முகாமில் சென்னையிலிருந்து 2 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சிக்காக சென்றிருந்தார்கள்.
நாடு முழுவதும் சங்கம் பரவ
நல்ல பல யுக்திகள்
நாடு முழுவதும் சங்கம் வேகமாக பரவ பரமபூஜனீய டாக்டர்ஜி பல யுக்திகளை கையாண்டார். நாகபுரியிலிருந்து சில மாணவர்களை கல்லூரி படிப்புக்காக வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்பினார். அந்த மாணவர்கள் படிப்பதோடு அந்தந்த ஊரில் புதிய ஷாகாக்களை ஆரம்பித்தார்கள். ஜங்கல் சத்யாகிரகத்தில் பரம பூஜனீய டாக்டர்ஜி கலந்து கொண்டார். அதில் அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது. டாக்டர்ஜி இந்த சத்யாகிரகத்ைத நாகபுரியில் செய்யாமல் விதர்பாவில் செய்தார். காரணம் விதர்பாவில் சங்கவேலை அப்பொழுது துவங்கப்படவில்லை. சிறையில் விதர்பாவிலுள்ள பல பிரமுகர்கள் அவருடைய தொடர்புக்கு வந்தார்கள். அவர்கள் சிறைவாசத்தில் டாக்டர்ஜியிடமிருந்து நாட்டு சேவையின் உணர்ச்சிபெற்று அவரவர்களின் ஊருக்கு திரும்பியதும் சங்க ஷாகாக்களை ஆரம்பித்தார்கள்.
வாரணாசி போன்ற இடங்களில் டாக்டர்ஜி ஷாகா ஆரம்பித்தார். காரணம் அந்த இடங்களில் எல்லா மாகாணங்களிலிருந்தும் மாணவர்கள் படிக்க வருகிறார்கள். அந்த இடத்தில் ஷாகாவை ஆரம்பித்தால் அந்த மாணவர்கள் திரும்பி அவர்களின் மாகாணங்களுக்கு போனதும் அவரவர் ஊர்களில் ஷாகாக்கள் ஆரம்பித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை தான்.
நாகபுரியில் நடக்கும் விஜயதசமி போன்ற பெரிய சங்க விழாக்களுக்கு மற்ற மாகாணங்களிலிருந்து முக்கிய பிரமுகர்களை வரவேற்பார். அவரை விழாவின் தலைமை வகிக்க சொல்லுவார். அல்லது சங்க சிக்ஷா வர்க சமயத்தில் வெளி மாகாணத்திலிருந்து பிரமுகர்களை அழைப்பார். அந்த வகையில் சென்னையில் ஸ்ரீ சஞ்சீவகாமத் என்ற பெரியவர் இருந்தார். அவர் பிரஹதாஸரி இயக்கம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் 1940-ம் வருடம் நாகபுரியில் மே மாதத்தில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்கவை பார்வையிடச் சென்றிருந்தார்.
சங்க வேலையின் ஈட்டி-முனை இவர்
டாக்டர்ஜியின் மனதில் இருந்த தீவிர தேசிய உணர்ச்சி அவருடன் பழகிய இளைஞர்களுக்கும் ஏற்பட்டது. அப்பேர்ப்பட்ட ஒரு இளைஞர் தாதாஜி பரமார்த்தர். அவர்தான் மஹாராஷ்டிரத்தின் பூணாவில் சங்க ஷாகாவை ஆரம்பித்தார். பஞ்சாபில் சங்க வேலை வளர உதவினார். அவர்தான் 1939-ம் ஆண்டின் இறுதியில் டாக்டர்ஜியால் சென்னையில் சங்க வேலையை ஆரம்பிக்க அனுப்பப்பட்டார். அவர் அதற்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்ததே இல்லை. தமிழ்மொழி தெரியாது. சென்னையில் அவருக்கு தெரிந்தவர்கள் எவரும் இல்லை. சென்னையில் இருக்கின்ற டாக்டர் நிம்கர் டாக்டர்ஜிக்கு தெரிந்தவர். அவரிடம் கொடுக்க ஒரு அறிமுக கடிதத்துடன் தாதாஜி சென்னைக்கு வந்தார். சென்னையில் ஏற்கனவே ஆரியசமாஜ் வேலை நடந்து கொண்டிருந்தது. மானனீய தாதாஜி அவர்களுக்கு முதலில் கிடைத்த நல்ல இளைஞர்களின் தொடர்பு ஆர்யசமாஜ் நிகழ்ச்சியில் தான். பிறகு பல வருடங்கள் சென்னை ஷாகாவிற்கு காரியவாஹ் என்ற பொறுப்பில் இருந்தவரும் சென்னை ஷாகாவின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு பெற்றவரும் மானனீய எத்திராஜ்ஜியும் இந்த இளைஞர் குழுவில் ஒருவர்.
மானனீய தாதாஜியுடன் வந்தவர்கள் நாகபுரி ஷாகாவைச் சேர்ந்தவர்கள். பிறகு வந்தவர்கள் பூனா ஷாகாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், ஆந்திரா மாகாணத்திலும் வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அப்பொழுது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாகாணங்கள் சேர்ந்து ஒரே மாகாணமாக மதராஸ் பிரஸிெடன்ஸி (Madras Presidency) என கூறப்பட்டது. சில வருடங்கள் கழித்து ஆந்திர மாகாணத்திற்கு தனி பிராந்த பிரசாரக்கை அறிவித்தார்கள். 1964-ம் வருடத்தில் கேரளா மாகாணம் சங்க அமைப்பில் தனி மாகாணம் ஆக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
ஆபத்தின் பரிசான அரும் மனிதர்
அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். தனியார் இயக்கம் ராணுவத்தை போன்ற உடை அணிந்து கெள்ளக்கூடாது என்பது வெள்ளைக்கார அரசாங்கத்தின் நிபந்தனை. சென்னையில் சூளை சால்ட்கோடார்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் சங்க ஷாகா நடந்து கொண்டிருந்தது. அதில் ஸ்வயம்சேவகர்கள் தண்டா பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். போலீஸ் அங்கு வந்து மா. தாதாஜியையும் அவருடன் சிக்ஷகாக இருந்த ஒருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். 1940-ம் வருடம் நாகபுரியில் மே மாதத்தில் நடந்த பயிற்சி முகாம் பார்த்து வந்தவர் ஸ்ரீ சஞ்சீவ காமத் அவர்கள். அவருடைய முயற்சியினால் சென்னையிலுள்ள பிரபல வக்கீல் ஸ்ரீ வி.ராஜகோபாலாச்சாரி ஸ்வயம்சேவகர்களுக்காக இந்த வழக்கில் வாதாடி வெற்றி பெற்றார். இந்த சம்பவத்தினால் சங்கத்திற்கு கிடைத்த லாபம் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி சங்க ஸ்வயம்சேவக் ஆகிவிட்டார். பிறகு அவர் பல வருடங்கள் தமிழ்நாடு, கேரளா சேர்ந்த பகுதிக்கு (தலைவர்) பிராந்த சங்கசாலக்காக இருந்தார். அவர் சங்கத்தில் தமிழ்நாட்டிலும், கேரளா சேர்ந்ததினாலும், மங்களூர் ஜில்லாவிலும் (அப்பொழுது South Canaa மாவட்டம் –மதராஸ் பிரசிடென்சியில் இருந்தது) ஜில்லா கேந்திரங்களில் நல்ல செல்வாக்கு இருக்கின்றவர்கள் பலர் சங்கசாலக் என்ற பொறுப்பில் வேலை செய்ய தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் முதல் வர்க
நாடு முழுவதும் சங்கவேலை ஒரே எண்ணத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கின்றது. அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வருடா வருடம் நடக்கும் சங்க ஊழியர்கள் பயிற்சியும் (சங்க சிக்ஷா வர்க), பிரசாரக் அமைப்பும். முதலில் சில வருடங்கள் இந்த வர்க நாகபுரியில் மட்டும் நடந்தன. தமிழ்நாட்டில் முதல் சங்க சிக்ஷா வர்க 1943ம் வருடம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. 1944, 45, 46 இந்த மூன்று வருடங்களில் தெற்கிலுள்ள 4 மாகாணங்களிலிருந்து ஸ்வயம்சேவகர்கள் பயிற்சிக்காக பெலகாவிக்கு போனார்கள். சங்க அமைப்பில் தனி மாநிலங்களில் கிளைகள் பிரிக்கப்பட்ட பிறகு தனி மாநிலங்களில் கிளைகள் அந்தந்த மாநிலங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இந்த முகாம்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற ஊர்களிலும், 1979-ம் வருடம் ராஜபாளையத்திலும் நடந்தது.
தொடரும்…
(விஜயபாரதம் 1.10.1979
விஜயதசமி மலரிலிருந்து)