ஜூன் 3, 4-ம் தேதிகளில் அரிய நிகழ்வு: வானில் 6 கோள்களின் அணிவகுப்பு; வெறும் கண்ணால் பார்க்கலாம்

 ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வை வரும் ஜூன் 3, 4-ம் தேதிகளில் கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் அடிவானில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் காணலாம். வியாழன் (Jupiter), புதன் (Mercury), செவ்வாய் (Mars), வருணன் (Uranus), சனி (Saturn), நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே வரிசையில் பார்க்க முடியும்.

அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கி.மீ.) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து காணக்கூடிய மிக அரிய நிகழ்வு SYZYGY என்று அழைக்கப்படுகிறது.

சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோள்களுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.

வரும் ஜூன் 3-ம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த 6 கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. வியாழன், புதன் மற்றும் வருணன் ஆகிய 3 கோள்களும் தொடுவானத்தை ஒட்டி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் இவற்றை பார்க்க பைனாகுலர் (Binocular) அல்லது தொலைநோக்கியை (Telescope) உபயோகப்படுத்த கூடாது. இக்கோள்களை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே சூரியன் உதித்து விடுவதால், அதில் இருந்து புறப்படுகிற ஒளி பைனாகுலர் அல்லது தொலைநோக்கியால் குவிக்கப்பட்டு, நமது விழித்திரையை உடனடியாக பாதித்தோ அல்லது எரித்தோ விடக் கூடிய அபாயம் உள்ளது.

பின்னிரவு நேரத்தில் சனிக்கோள் கும்பம் (Aquarius) விண்மீன்மண்டலத்திலும், வருணன் மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்திலும், சிறிது நேரத்தில் செவ்வாய் மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்திலும் காணலாம். இந்த மூன்றையும் நேரடியாகவோ, பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலமாகவோ இரவில் பார்க்கலாம்.சூரியனுக்கு மிக அருகில், ரிஷப ராசி மண்டலத்தில் (Taurus) காணப்படும் வருணன், வியாழன், புதன் கோள்களை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி மூலம் பார்ப்பதை தவிர்த்துவிட்டு வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதாகும்.

புதன், வியாழன் கோள்கள் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் வெறும் கண்ணால் பார்ப்பது கடினம். யுரேனஸ், நெப்டியூன் கோள்களை பார்ப்பதற்கு அதிக பொறுமையும், திறன்மிக்க ஒரு பெரியதொலைநோக்கியும் தேவை. சூரியன் உதிப்பதற்கு சற்று முன்னால் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் அதிக கவனம் தேவை. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3-ம் தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4-ம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும்.

இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி, 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.