சேவா இண்டர்நேஷ்னல்

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் இங்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம். கொரோனா காலத்தில் டெக்ஸாஸ், ஹாரிஸ் கவுண்டி மாநில மக்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்தனர். அவர்களுக்கு அந்த நேரத்தில் பெரிதும் உதவியது சேவா இண்டர்நேஷனல் அமைப்பு. இந்தோ – அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவா இண்டர்நேஷனலுக்கு அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் லைப் பவுண்டேஷன் அமைப்பு 5000 டாலர் ரொக்கப் பணத்துடன் விருது வழங்கி கெளரவித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சேவா இண்டர்நேஷனல் அமைப்பு  மக்களுக்கு முகக்கவசம், சேனிடைஸர் வழங்கியது. மேலும் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு உள்ளிட்ட சேவைகளையும் இந்த அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் வழங்கினர். விருதுக்கு சேவா இண்டர்நேஷனல் தலைவர் அருண் கங்கானி தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

1993-ல் புலம் பெயர்ந்த பாரத நாட்டினரால் ஆரம்பிக்கப்பட்டது சேவா இண்டர்நேஷனல் அமைப்பு. இது தற்போது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்த தன்னார்வ தொண்டர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் பல்வேறு தொண்டு காரியங்களை செய்து வருகின்றனர். கல்வி, சுற்றுசூழல், பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சேவா இண்டர்நேஷனல் மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. புயல், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட பல இயற்கை பேரிடர் காலங்களில்  இவர்களது தொண்டு அளப்பரியது. இவர்கள் தங்கள் தாய்நாடான பாரதத்தையும் மறக்கவில்லை. அவர்கள் இங்கும் பல்வேறு சேவை காரியங்களை செய்து வருகின்றனர்.