மாறிவரும் உலக பாதுகாப்புச் சூழலில், வான்வழித் தாக்குதல்கள் புதிய வடிவங்களிலும், புதிய தொழில்நுட்பங்களிலும் உருவெடுத்து வருகின்றன. ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பாரதம் தனது வான்பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கி வருகிறது. அதன் முக்கிய அடையாளமாக, 2035-ஐ இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ‘சுதர்சன் சக்ரா’ திட்டம், பல அடுக்குகளைக் கொண்ட முழுமையான பாதுகாப்புக் கவசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மிஷன் சுதர்சன் சக்ரா, பாரதத்தின் “அனைத்து வான்பாதுகாப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் தாய் அமைப்பு” எனக் கருதப்படுகிறது. இதில், ட்ரோன் எதிர்ப்பு, UAV எதிர்ப்பு, நீண்ட தூர ஏவுகணை தடுப்பு, ஹைப்பர்சோனிக் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் போன்றவை ஒரே கட்டமைப்பில் இணைக்கப்படுகின்றன. சென்சார்கள், ரேடார்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு இந்தத் திட்டத்தின் முதுகெலும்பாக அமையும்.
“எதிர்கால போர்களின் இயல்பை கருத்தில் கொண்டு, கீழ்மட்டத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும், மேல்மட்டங்களில் மேம்பட்ட தடுப்பு தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படும்”.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதே. ராணுவ மற்றும் மூலோபாய கட்டமைப்புகள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், இது தாக்குதல்களை தடுக்க மட்டுமல்ல, தேவையெனில் வலுவான எதிர்தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டதாக இருக்கும்.
மிஷன் சுதர்சன் சக்ரா முழுமையாக உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. DRDO, பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், தனியார் தொழில்துறை மற்றும் இளம் விஞ்ஞானிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இது ‘ஆத்மநிர்பர் பாரத்’ நோக்கத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
இந்நிலையில், பாரதத்தின் தற்போதைய வான்பாதுகாப்பு திறன்களாக S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, DRDO–BEL இணைந்து உருவாக்கும் Project Kusha, மற்றும் ஆகாஷ் பிரைம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே வலுவான அடித்தளமாக உள்ளன.
மகாபாரதத்தில், அர்ஜுனன் ஜயத்ரதனை வீழ்த்த உதவ, சூரிய ஒளியை மறைத்த ஸ்ரீகிருஷ்ணரின் சுதர்சன் சக்ரா போர் வரலாற்றின் திசையை மாற்றியது. அதுபோலவே, இன்றைய காலத்தில் பாரதம் தனது முக்கிய நிறுவனங்களையும் குடிமக்களையும் பாதுகாக்க, நவீன தொழில்நுட்பக் கவசத்தை உருவாக்குகிறது.
பண்பாட்டு மரபும், அதிநவீன அறிவியல் தொழில்நுட்பமும் ஒன்றிணையும் மிஷன் சுதர்சன் சக்ரா, எதிர்கால சவால்களை தைரியமாக எதிர்கொள்ள பாரதத்தை தயார்படுத்துகிறது. முப்படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, பாதுகாப்பு இடைவெளிகளை நீக்கி, பாரதத்தின் வான்வழி பாதுகாப்புத் திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது விளங்குகிறது.