சிலை கடத்தலை விசாரிக்கும் சி.பி.ஐ

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008ல் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை மீட்ட காவல்துறையினர், கோடிக்கணக்கான ரூபாய்க்கு அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் விற்க உதவியதாகப் புகார் எழுந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டார். அதில், திருவள்ளூரில் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்கவும் தன்னை பழிவாங்கவும் தான் பொன். மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாக காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த சிலை கடத்தல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ விசாரணை மட்டுமே சரியாக இருக்கும். எனவே, நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த ஜூலையில், பொன். மாணிக்கவேல் மீதான புகாரின் மீது சி.பி.ஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில், சிபிஐ இந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளது.