சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கனியாமூர் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் கனியாமூர் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு திறமையற்ற அரசுதான் காரணம். காலாவதி மருந்து விவகாரத்தில் உயர் நீதிமன்றமே விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டிது அரசு, ஆனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். உள்ளாட்சி பணிகளை விளம்பரப்படுத்த ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ. 350 செலவாகும் பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் சட்டவிரோதமான மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுநரை விமர்சிப்பது என்பது தி.மு.கவின் வாடிக்கையான ஒன்று. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர்தான் தி.மு.கவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம்” என்று கூறினார்.