சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்

உத்தராகண்ட் மாநில பா.ஜ.க மூத்த தலைவரும் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா. அம்மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. ‘வனந்த்ரா’ என்ற அந்த சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம் பெண்ணை புல்கிட் ஆர்யா கொலை செய்ததாக தெரியவந்தது. அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்தார். விடுதியில் பணியாற்றும்  2 ஊழியர்கள் இதற்கு உடந்தை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான ‘வனந்த்ரா’ சொகுசு விடுதியையும் இடித்து தள்ள முதல்வர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புல்டோசருடன் வந்த அதிகாரிகள் சொகுசு விடுதியை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும், புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவையும் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி பா.ஜ.க உத்தரவிட்டுள்ளது.