சங்க கங்கையின் இரு கரைகள்

சங்க முன்னோடிகளான இரு பெரும் ஆளுமைகளை நம் மனக்கண் முன் ஒரே நேரத்தில் கொண்டு வருகிறார் கட்டுரையாளர். டாக்டர்ஜி 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் ஆர்வலர். சங்கம் அடிப்படையில் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சமுதாய − -அரசியல் பணியாக இருந்தது. டாக்டர்ஜியின் வாரிசான ஸ்ரீ குருஜி, சங்கத்தின் பார்வையிலும் பணியிலும் சமய, ஆன்மிக கூறுகளை அறிமுகப்படுத்தினார். சமுதாய − அரசியல் துறைக்கு மாறாக சமுதாய − கலாச்சார துறைக்கு ஸ்ரீ குருஜி முக்கியத்துவம் அளித்தது, மிகப்பெரிய நல்லெண்ணத்தைப் பெற அமைப்புக்கு உதவியது. அவர் அரசியலை வெறுக்கவில்லை. உண்மையில், 1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கியபோது,  தீனதயாள் உபாத்யாய, அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி போன்ற முக்கியமான சங்க கார்யகர்த்தாக்களை அவருடன் அரசியல் பணிக்காக அனுப்பினார். இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு,
1925ன் விஜயதசமி நாளில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பாரதத்தின் இதயப் பகுதியில் ஒரு விதையை ஊன்றினார்.- ஒழுக்கம், தேசியத்தன்மை, தாய்நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கருத்து அது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தான் அந்த விதை. இன்று அது ஒரு வலிமையான ஆல விருட்சமாக உயர்ந்து நிற்கிறது. தேசிய சேவை, கலாச்சார மறுமலர்ச்சி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணித்துக் கொண்ட கோடிக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை ஊக்குவித்தவாறு சமுதாயத்தின் ஒவ்வொரு மூலையிலும் கிளைபரப்பி வியாபித்துள்ளது.

நாகபுரியில் உள்ள ஒரு சில அர்ப்பணிப்புள்ள இளைஞர்களிலிருந்து, பாரதத்தின் சமுதாய, கலாச்சார, அரசியல் வளாகங்களில் செல்வாக்கு செலுத்தும் நாடு தழுவிய இயக்கமாகி பாரதத்தின் மறுமலர்ச்சிக்குப் பின்னால் அமைதியான ஆனால் அசைக்க முடியாத சக்தியாக ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. இது பாரதத்தின் முத்திரையான தேசியப் பண்புகளை பாதுகாத்து வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்கள், போர் வீரர்கள், தீர்க்கதரிசிகள் ஆகியோரை உருவாக்கியுள்ளது.

100 வயதிலும், இந்த அமைப்பு இன்னும் இளமையாகவும், முன்மாதிரியாகவும் சுறுசுறுப்பாகவும் தெரிகிறது. லட்சக்கணக்கான அங்கத்தினர்கள் ராணுவத்தைப் போன்ற துல்லியத்துடனும், லட்சியவாத அர்ப்பணிப்புடனும் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் எந்த ஆரவாரமும் இல்லாமல், ஊடக / விளம்பர வெளிச்சத்திலிருந்து விலகி உள்ளன.

ஆர்.எஸ்.எஸ்ஸின் எண்ணிக்கை உள்ளிட்ட தரவுகளின் விசாலத் தன்மையைப் புரிந்துகொள்வது ஊக்கம் தரும்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மட்டுமே தனித்துவமானது ஷாகா எனப்படும் தினசரி சந்திப்பு. நாட்டில் தினசரி சந்திப்பு 83,000க்கும் மேற்பட்ட இடங்களிலும், வாராந்திர சந்திப்பு 32,000க்கும் மேற்பட்ட இடங்களிலும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு இது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தவறாமல் நிகழும் சந்திப்புகளை நடத்தும் ஒரு பெரிய அரசு சாரா அமைப்பாக திகழ்கிறது.

ராமர் கோயிலைக் கட்டுவதற்காக 2023ம் ஆண்டு ஒரு மாத காலம் அது மேற்கொண்ட நிதி சேகரிப்பு இயக்கத்திலிருந்து அதன் வீச்சை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அந்தக் காலகட்டத்தில் சுமார் 50 லட்சம்
ஆர்.எஸ்.எஸ் அங்கத்தினர்கள் 5.8 லட்சத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் / கிராமங்களில் பரவிச் சென்று, கிட்டத்தட்ட 20 கோடி வீடுகளைத் தொடர்பு கொண்டார்கள். இது நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு வீடுகள் ஆகிறது. 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, நாடு முழுவதும் 28 கோடி மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. இந்த எண்ணிக்கை ஆர்.எஸ்.எஸ் பரவலின் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த அமைப்பு 40க்கும் மேற்பட்ட சகோதர அமைப்புகளை உருவாக்கியுள்ளது, அவை சங்க பரிவார் என்று பிரபலமாக அறியப்படுகின்றன. அவையும் நாட்டில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ளன.

ஆனால், இந்த அமைப்பு பலருக்கு ஒரு புதிராம். “ஆர்.எஸ்.எஸ்ஸைப் புரிந்துகொள்வது கடினம், தவறாகப் புரிந்துகொள்வது எளிது” என்று 1983ல் ‘ஆர்.எஸ்.எஸ்: த பிரதர்ஹூட்
இன் சாஃப்ரன்’ என்ற பெயரில் சங்க வரலாறு குறித்த நூல் எழுதிய அமெரிக்க கல்வியாளர் வால்டர் கே ஆண்டர்சன் இடக்காக சொன்னார்.

ஒரு நூற்றாண்டு காலமாக, ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பாக மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையாக விளங்குகிறது. மாற்றத்திற்கான இயக்கமாக, தேசிய மறுமலர்ச்சிக்கான உந்துவிசையாக இருந்து வருகிறது. அது எதிர்ப்புகளைக் கடந்துள்ளது; துன்பங்களைத் தாண்டியுள்ளது; ஒவ்வொரு சவாலையும் எதிர்த்து உறுதியாக நின்றுள்ளது; இந்த சங்க சக்தி புஜபலத்தில் அல்ல, அதன் ஸ்வயம்சேவகர்களுடைய தகர்க்க முடியாத மனோதிடம், அவர்களின் ஒழுக்கம், பாரத மாதாவிடம் அவர்களின் அசைக்க முடியாத பக்தி / அர்ப்பணிப்பு இவற்றில்தான் (அதாவது அவர்களின் தேசபக்தியில்தான்) உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கக் கண்ணோட்டத்தில், ஒரு தேசபக்தர் என்பவருக்கு மண்ணுடன் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும். நிலப்பரப்பு ரீதியாக மட்டுமல்ல, ஆன்மிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும். தேசபக்தி “மண்ணுடன் ஒன்றி” அதாவது மண் தரும் அனைத்திடமும் பூணுகிற அன்பைக் குறிக்கிறது: நிலம், ஆறுகள், விலங்குகள் அனைத்திடமும், மிக முக்கியமாக, பன்முகத்தன்மை கொண்ட மக்களிடம். தேசபக்தர் முதலிடம் தருவது கலாச்சாரப் பாரம்பரியமான ராஷ்ட்ரத்திற்கே (நேஷன்); அரசுக்கு (ஸ்டேட்) அல்ல.

மறுபுறம், ஒரு பேட்ரியாட் எனப்படுபவர் ‘ஸ்டேட்’ விசுவாசி. எல்லை, சட்டம், ஆளுகை கொண்ட ராஜாங்க அமைப்பை சார்ந்திருப்பது பேட்ரியாட் தன்மை. அது தேசிய அரசை அதன் இறையாண்மையுடன் அடையாளம் காண்பது. பேட்ரியாட் என்பவருக்கு தேசியம், குடியுரிமை அல்லது சட்ட அந்தஸ்தின் அடிப்படையிலான “உள்-குழுக்கள்”, “வெளி-குழுக்கள்” இவை முக்கியம்.

உண்மையில், தேசபக்தி ஒரு முனை; பேட்ரியாட் தன்மை மறுமுனை. சிலர் இரண்டு குணங்களையும் கொண்டிருக்கலாம், இன்னும் சிலருக்கு ஒரு பக்க சாய்வு இருக்கலாம். கலாச்சார வேர்கள், மரபுகள் இவற்றுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிலவும் மக்களின் பரஸ்பர நல்லுறவை மதிக்கும் ஒருவர் ஒரு தேசபக்தராக இருக்கலாம். தேசிய நிர்வாகம், அரசியல் சித்தாந்தம் சட்ட கட்டமைப்பு இவற்றுடன் வலுவாக இணைந்த ஒருவர் ஒரு பேட்ரியாட்டாக இருக்கலாம்.

ஸ்வயம்சேவகர்களின் தகர்க்க முடியாத உத்வேகம், அவர்களின் ஒழுக்கம், பாரத மாதாவிடம் அவர்களுக்குள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இவற்றுடன் கூடிய தேசிய மறுமலர்ச்சி, மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பது போல நடக்கவில்லை. இந்த மாற்றத்திற்கான விதை, தினசரி ஷாகா என்ற தனித்துவமான அமைப்பின் வாயிலாக ஊன்றப்பட்டது, வளர்க்கப்பட்டது, வலுப்படுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஆரம்பத்திலிருந்தே, “ஸ்வயம்சேவகர் என்பவர் அமைப்பின் தனித்துவமான  செயல்பாட்டாளராக இருப்பார். அவரை ஒரு வாலண்டியர் என்றோ மெம்பர் என்றோ கூட அழைக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறினார். அந்த விஷயத்தில், ஆர்.எஸ்.எஸ் என்பது எந்தவொரு முறையான உறுப்பினர் பதவியும் இல்லாத ஒரு திறந்த அமைப்பு, இந்த தனித்துவமான பண்பு பலருக்கும் புதிர். கைம்மாறு எதிர்பார்க்காமல் தேசிய நலனுக்காக தங்கள் உடல், மனம், பணத்தை (ஆர்.எஸ்.எஸ் மொழியில் ‘தன, மன தன’) அர்ப்பணிக்க முன்வரும் தேசத்தின் பிரஜைகளே ஸ்வயம்சேவகர்கள்.

இந்த சூழலில், ஒரு ஸ்வயம்சேவகரின் மனநிலையை விளக்க சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது: “கேளுங்கள்,  ஹிந்து என்று சொன்னதும் உங்களுக்குள் ஒரு மின்னலை போன்ற அதிர்வு ஏற்பட்டால்தான் நீங்கள் ஒரு ஹிந்து. எந்த நாட்டிலிருந்தும், நமது மொழியையோ அல்லது வேறு எந்த மொழியையோ பேசும் போது, அந்தப் பெயரைத் தாங்கிய ஒவ்வொரு மனிதனும் உடனடியாக உங்களுக்கு மிக நெருக்கமானவனாகவும் அன்பானவனாகவும் மாறும்போது மட்டுமே நீங்கள் ஒரு ஹிந்து. அந்தப் பெயரைத் தாங்கிய எவருடைய துயரம் உங்கள் இதயத்தில் தைத்து, உங்கள் சொந்த மகன் துன்பத்தில் இருப்பது போல் நீங்கள் உணரும்போது மட்டுமே நீங்கள் ஒரு ஹிந்து.

இந்த சொற்பொழிவின் தொடக்கத்தில் நான் மேற்கோள் காட்டிய மகான் குரு கோவிந்த் சிங்கின் சிறந்த உதாரணத்தைப் போல, அவர்களுக்காக எல்லாவற்றையும் தாங்க நீங்கள் தயாராக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு ஹிந்து. இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடி, ஹிந்து மதத்தின் பாதுகாப்பிற்காக தனது சொந்த ரத்தத்தைச் சிந்திய பிறகு, போர்க்களத்தில் தனது குழந்தைகள் கொல்லப்படுவதைக் கண்ட பிறகும் பாருங்கள், குருவின் இந்த உதாரணத்தை: அவர் யாருக்காக தனது ரத்தத்தையும் தனது சொந்த உற்றார் உறவினர் ரத்தத்தையும் சிந்தினாரோ அவர்களால் கூட கைவிடப்பட்டார். அந்த காயமடைந்த சிங்கம், அமைதியாக களத்திலிருந்து ஓய்வு பெற்றது. தெற்கில் இறந்தது. அவரை நன்றியில்லாமல் கைவிட்டவர்களுக்கு எதிராக அவரது உதடுகளிலிருந்து சாபமாக ஒரு சொல் வரவில்லை! கவனியுங்கள், நீங்கள் உங்கள் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்பினால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கோவிந்த் சிங் ஆக வேண்டும்,” இவ்வாறு கர்ஜித்தார் அந்த துறவிப் பெருந்தகை.

ஸ்வயம்சேவகர்கள் விவேகானந்தர் எதிர்பார்த்த ஹிந்துக்கள். ஏனெனில் அவர்கள் எண்ணற்ற கஷ்டங்கள், சவால்களை எதிர்கொண்டனர். பலர் குரு கோவிந்த் சிங்கைப் போலவே தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். தொடர்ந்தும் செய்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் போதனையும் ஆர்.எஸ்.எஸ் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. “ஹிந்து ராஷ்ட்ரம்” என்ற கருத்து பெரும்பாலும் பண்டைய பாரத தேசத்தின் நாகரிகம் அதன் கலாச்சார அடையாளம், ஒருமைப்பாடு பற்றிய விவேகானந்தரின் போதனைகளிலிருந்து பெறப்பட்டது. எந்த ஒரு மதப் பிரிவு  சார்ந்தும் அல்ல. ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது சர்சங்கசாலக் மாதவ சதாசிவ கோல்வல்கர், அன்புடன் “குருஜி” என்று அழைக்கப்படுகிறார், அவர் சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் துறவி.

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர்ஜி, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் ஆர்வலர். 1900களின் முற்பகுதியில் லோகமான்ய பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் சேருவதற்கு முன்பு சிறிது காலம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தின் உறுதியான தலைவராக, ஹெட்கேவார் காங்கிரஸ் பதாகையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றார். 1920ல் நாகபுரியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆண்டு கூட்டத்தொடர் நடந்தபோது உள்ளூர் அமைப்பாளராக அவர் முக்கிய பங்கு வகித்தார். 1930ம் ஆண்டு காந்தியின் அழைப்பின் பேரில் காட்டு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். வளர்ந்து வரும் தனது அமைப்பில் இணைந்தவர்கள் உட்பட அனைவரையும் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்தார்.

ஆனால் தேசத்தின் வீழ்ச்சிக்கான மூல காரணத்தை முதலில் அகற்றாமல் சமரசங்கள் மூலம் அடையப்பட்ட சுதந்திரம் பலவீனமாகவும் விரைவில் தேவையற்றதாகவும் ஆகிவிடும் என்று அவரது சாதுர்யமான அரசியல் பார்வை அவருக்கு உணர்த்தியது. தேசிய சமுதாயத்திற்குள் அரசியல் ஒற்றுமையோ சமுதாய ஒற்றுமையோ இல்லாமல் போனதுதான் தேசம் அடிமைப்பட மூல காரணம் என்று அவர் கருதினார்.

சாதி, சமயப் பிரிவுகளால் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாமல் போனது; அரசியலில்  ஆட்சியாளர்களிடையே ஊழல், பேராசை ஒழுக்கக் கேடு காரணமாக ஒற்றுமையின்மை நிலவியது; அதனால் மதமாற்றம் செய்யும் செமிட்டிக் மதங்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது. இவற்றால் நாட்டின் இறையாண்மை அந்நிய படையெடுப்பாளர்களிடம் சிக்க நேர்ந்தது. வலுவான தனிப்பட்ட தன்மை கொண்ட, தேசிய பெருமித உணர்வு கொண்ட ஒரு தேசிய சமுதாயத்தை உருவாக்குவது ஹெட்கேவாரின் பரிந்துரை. அதுவே பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் நீடித்த ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்கும் என்றார் அவர். 1925ம் ஆண்டு ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தொடங்குவதற்கு இது வழிவகுத்தது. இது அடிப்படையில் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சமுதாய- − அரசியல் பணியாக இருந்தது.

திலகர், ஸ்ரீ அரவிந்தர், வீரசாவர்க்கர் போன்ற சீர்திருத்தவாதிகளின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு, ஹெட்கேவாரின் அமைப்பின் மையமாக இந்தப் பணி அமைந்தது. ஆரம்ப ஆண்டுகளில் ஸ்வயம்சேவகர்கள் “பாரதத்திற்கு சுதந்திரம் பெறுவது” என்ற குறிக்கோளை உள்ளடக்கிய ஒரு உறுதிமொழி ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஹெட்கேவாரின் வாரிசான குருஜி கோல்வல்கர், 1940ல் சர்சங்கசாலக் ஆன பிறகு சங்கத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தார். நாடு சுதந்திரம் பெறும் நிலை நெருங்கி வந்தபோது, கோல்வல்கர் அரசியல் உள்ளடக்கத்தைக் குறைத்து, அமைப்பின் தொலைநோக்கிலும், பணியிலும் சமய, ஆன்மிக கூறுகளை அறிமுகப்படுத்த முயன்றார். முன்னர் குறிப்பிட்டபடி, கோல்வல்கர் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஒரு துறவி.

கலாச்சாரமும் மதமும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் ஒன்றிணைப்பதாகவும் இருந்தாலும், ஹிந்துவுக்கு அரசியல் என்பது சமுதாய வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அரசியல் பெரும்பாலும் பிரிக்கும் தன்மை கொண்டது என்ற உறுதியான கருத்தை அவர் கொண்டிருந்தார்.

இவ்வாறு, கோல்வல்கரின் தலைமையின் கீழ், இந்த சமுதாய − அரசியல் அமைப்பு ஒரு சமுதாய − கலாச்சார அமைப்பின் தன்மையைப் பெற்றது. அரசியல் சாராத தன்மையை ஏற்ற இந்த மாற்றம் எளிதானது அல்ல.

சுதந்திர இயக்கத்தில் ஹெட்கேவாரின் தீவிர பங்கெடுப்பு, ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் நோக்கம் பற்றிய ஒரு கருத்தை உருவாக்க வழிவகுத்தது. இது 1930களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் வகையறா சங்க செயல்பாடுகளில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதிக்கச் செய்தது. குருஜி அரசியல் சாராத தன்மை கொண்ட ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்க உணர்வுபூர்வமாக முயன்றார், இருப்பினும் 1940களின் தசாப்தத்தில் சவால் கடுமையாகவே இருந்தது.

ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் போன்ற தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சுதந்திர பாரதத்தின் தலைமையும் ஆர்.எஸ்.எஸ்ஸை ஒரு அரசியல் கோணத்தில் பார்த்தது. நேரு இதை தனது மதச்சார்பற்ற சித்தாந்த அரசியலுக்கு ஒரு சவாலாகக் கருதினார், 1948ல் காந்தி கொலையை ஒரு சாக்காகப் பயன்படுத்தி சங்கத்தை நசுக்க முயன்றார்கள். கூறப்படும் குற்றத்திற்கும் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உள்துறை அமைச்சரான படேல் புரிந்துகொண்டார்.

ஆனால் தனது சுயாதீன அடையாளத்தைப் பேணுவதற்குப் பதிலாக, காங்கிரஸை வலுப்படுத்துவதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினார். குருஜி தனது அமைப்பை ஒரு அரசியல் கருவியாக மாற்ற மறுத்ததன் தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டு  ஏராளமான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டதில் அமைப்புக்கு தற்காலிக சிக்கல் ஏற்பட்டது.

குருஜியின் உறுதியான, அரசியலற்ற நிலைப்பாடு அமைப்புக்குள் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் குருஜி உறுதியாக நின்றார். குருஜி அரசியலை வெறுக்கவில்லை. உண்மையில், 1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கியபோது, தீனதயாள் உபாத்யாய, அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி போன்ற முக்கியமான சங்க கார்யகர்த்தாக்களை அவருடன் அரசியல் பணிக்காகக் அனுப்பினார். இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சமுதாய, கலாச்சார நோக்கத்துடன் ஒத்துப்போகும் அரசியல் இலக்குகளுக்கு உறுதியளித்த புதிய கட்சியின் எழுச்சியை தொடர்ந்து வழி நடத்தினார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தன்மையையும் அமைப்பையும் அரசியல் சாராததாக அவர் விடாமுயற்சியுடன் பராமரித்தார். அந்தக் காலகட்டத்தில், அவரும், பிற கார்யகர்த்தாக்களும் அனைத்துப் பிரிவு அரசியல் தலைவர்களுடன் நல்லுறவை உருவாக்க முடிந்தது.

சமுதாய − அரசியல் துறைக்கு மாறாக சமுதாய − கலாச்சார துறைக்கு கோல்வல்கர் முக்கியத்துவம் அளித்தது, மிகப்பெரிய நல்லெண்ணத்தைப் பெற அமைப்புக்கு உதவியது. ஆரம்பகால சித்தாந்த வேறுபாடுகள்  இருந்தபோதிலும், 1963ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பாரத ராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துச் செல்லும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸை நல்லெண்ணம் கொண்டதாக நேரு கண்டறிந்தார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 2,500க்கும் மேற்பட்ட
ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். 1965ம் ஆண்டு பாரத, பாகிஸ்தான் போர் ஏற்பாடு குறித்து விவாதிக்க கோல்வல்கரை லால் பகதூர் சாஸ்திரி ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பி டெல்லிக்கு அழைத்தார்.

1967ல் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. சர்க்கார் தலைமையில் தேசிய பசுவதை தடை விவகாரத்தை ஆராய இந்திரா காந்தி ஒரு உயர் அதிகாரக் குழுவை அமைத்தபோது, அந்தக் குழுவில் கோல்வல்கரும் இடம் பெற்றிருந்தார். 1973ம் ஆண்டு கோல்வல்கரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. “சபை உறுப்பினராக இல்லாத ஒரு சிறந்த ஆளுமை ஸ்ரீ கோல்வல்கர் இப்போது இல்லை. நம்மில் பலர் அவருடன் உடன்படவில்லை என்றாலும் அவர் தனது ஆளுமை சக்தியாலும், அவரது நம்பிக்கையின் தீவிரத்தாலும் தேசிய வாழ்வில் ஒரு மரியாதைக்குரிய ஸ்தானம் பெற்றார்” என்று இந்திரா காந்தி அஞ்சலி செலுத்தினார்.

பாரதம் ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும்போது, ஆர்.எஸ்.எஸ் அதே ஊக்கம், அதே நோக்கம் அதே தொலைநோக்குடன் அதன் அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாரதத்தை விஸ்வ குருவாக, தன்னம்பிக்கை, வலிமை வாய்ந்த ஒன்றுபட்ட தேசமாக மாற்றுவதற்கு, அதன் கலாச்சார நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றி எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கதை, வரலாற்றில் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல,- அது ஒவ்வொரு தசாப்தத்திலும் உயிர்ப்புடன் அதிரும் பாரதத்தின் ஆன்மத் துடிப்பு.

சங்கப் பணியை விரிவுபடுத்துதல், தேசிய சுயசார்பை ஊக்குவித்தல், ஒற்றுமையை வளர்த்தல், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை இனி முன் நிற்கும் கடமைகள். தன் கலாச்சார, அறிவுசார் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதையும், பாரதத்தின் நாகரிக பாரம்பரியம் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் சக்தியாக இருப்பதை உறுதி செய்வதையும் சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமுதாய, பொருளாதார, கலாச்சார ரீதியான சவால்களுக்கு ஈடுகொடுக்க அதிக ஒற்றுமை, தன்னம்பிக்கை, தேசிய உணர்வு தேவை. சேவை, சமரஸதா (சமூக நல்லிணக்கம்), ஸ்வாபிமான் (சுயமரியாதை) ஆகியவற்றில் சங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை பாரதத்தை தன் பண்புகளில் வேரூன்றி, தன் அபிலாஷைகளில் முன்னோக்கிச் செல்லும் உலகளாவிய தலைமைக்கு உயர்த்தும் ஒரு தருணத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும்.

“சங்கச் சத்வம் சம் வோ மனாம்ஸி ஜானதாம்” (நாம் ஒன்றாக செல்வோம், ஒன்றாகப் பேசுவோம், நம் மனங்கள் ஒன்றுபடட்டும்) என்ற மந்திரத்துடன் சங்கம் முன்னேறிச் செல்லும். சங்கம் கூட்டு முயற்சி, தன்னலமற்ற சேவை, தாய் நாட்டிடம் அசைக்க முடியாத பக்தி, அர்ப்பணிப்பு ஆகியவை தேச மேம்பாட்டுக்கு இன்றியமையாதவை என்பதை ஒவ்வொரு பாரதியருக்கும் நினைவூட்டுகிறது.

கட்டுரையாளர்: வட தமிழக ஆர்.எஸ்.எஸ் இணை செயலர்.