காற்று மாசுபாட்டுக்கு யார் காரணம்?

டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ‘மோசமான’ நிலையில் நீடிப்பதால், தொடக்கப் பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்ட வேளையில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், புதர்கள். விவசாயக் கழிவுகள் எரிப்பு சம்பவங்களை வெகுவாக குறைத்துள்ளன. ஆனால். ராஜஸ்தானில் 160 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 20 சதவீதம் காற்று மாசுபாடு தொடர்பான எரிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. இரு மாநில அரசுகளும் இவற்றை கட்டுப்படுத்த போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக இயந்திரங்களை வாங்குவதற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இது டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு அதிகளவில் பங்களிக்கிறது. 2018 முதல், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 3,138 கோடியை விவசாயக்கழிவு மேலாண்மைக்காக வழங்கியது. அதில் கிட்டத்தட்ட ரூ. 1,500 கோடி பஞ்சாபிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், பல மாநிலங்கள் இதில் பாராட்டத்தக்க வேலையைச் செய்து, படிப்படியாக நேர்மறையான திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தொடரும் மோசமான சூழ்நிலையை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் நோக்கம் மற்றும் நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்புவது ஏன் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.