காங்கிரசின் பொய் மூட்டை கேள்விகள்

பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை, ஏமாற்ற மலை என்று பா.ஜ.க. கூறியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி மிகச் சிறப்பாக தனது 9 ஆண்டு கால ஆட்சியை உலகம் போற்றும் வகையில் பல சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளது. இத்தருணத்தில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.

காங்கிரசின் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், “பாரதத்தின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டுடன் மோதல் வெடித்தபோது பிரதமர் மோடி தலைமைய்லான ஆட்சியில் நாடு தைரியத்தை வெளிப்படுத்தியது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் எல்லைப்புற உள்கட்டமைப்புகள் மிகச்சிறப்பாக பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி, நாட்டின் எல்லைகளை வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருந்தது. காங்கிரஸ்காரர்கள், மோடி மீதான வெறுப்பை விட்டு வெளியே வர வேண்டும். காங்கிரஸ் கட்சி மிக மோசமாக கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது. கொரோனா தொற்று மோசமாக நிர்வகிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது. பாரதம் கொரோனா தொற்றை நிர்வகித்த விதத்தை ஒட்டுமொத்த உலகமே பாராட்டி அங்கீகரித்துள்ளது. நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அரசை வேண்டுமானால் விமர்சியுங்கள். ஆனால், அதற்காக நாட்டின் முடிவை ஏன் பலவீனப்படுத்துகிறீர்கள்? காங்கிரசாரின் விமர்சனம், சுகாதார பணியாளர்களையும், நாட்டை பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றியவர்களையும் அவமதிப்பதாக உள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது பாரதத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது அது 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 50 லட்சம் கோடிக்கும் அதிகம். சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதம். உற்பத்தி துறையில் பாரதம் 99 சதவீத உள்நாட்டு அலைபேசி தேவைகளை தற்போது உள் நாட்டு உற்பத்தி மூலம் ஈடு செய்கிறது. ஆனால் 2014ம் ஆண்டு இதில் 78 சதவீதம் இறக்குமதிதான் செய்யப்பட்டது. விவசாய உற்பத்தி பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடிகள். 312 திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு 6.68 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இடைத்தரகர்களுக்கு செல்லும் ரூ. 2.70 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி உள்ள கேள்விகள், பொய் மூட்டை ஏமாற்ற மலை. 9 கேள்விகளும் விமர்சனத்தின் அடிப்படையில் எழவில்லை. அவை மோடி மீதான உங்களது நோய் இயல் வெறுப்பினால் எழுந்தவை” என கூறினார்.