ஒரே ஊர்க்காரர்களான 10,000 இளைஞர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் பாரத ராணுவப் பணி புரிகிறார்கள். எந்த ஊர்? கஹ்மர் (உ.பி). மக்கள் தொகை 1.5 லட்சம். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நபராவது நாட்டுக்காக (ஜவான் முதல் பிரிகேடியர் வரை) ராணுவப் பணியில் செயல்படுகிறார்கள்.
இதுவரை 15,000க்கும் மேற்பட்ட வீரர்களைத் தந்துள்ளது கஹ்மர். இங்கு 5,000க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் வசிக்கிறார்கள். 1965 முதல் 1999 கார்கில் வரை ஒவ்வொரு போரிலும் களத்தில் நின்றவர்களில் 50 பேர் இந்த கிராமத்து வீரர்கள். சீருடை, பதக்கங்கள் இல்லாத வீடு அரிதிலும் அரிது. நாட்டிற்காகப் போராடி வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய நினைவுத் தூண் இந்த கிராமத்தில் உயர்ந்து நிற்கிறது.
“அரசாங்கம் அனுமதித்தால், நான் எல்லைக்குச் செல்ல தயார்” என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த பல களம் கண்ட 90 வயது பன்ஷிதர் சிங். கஹ்மர் 42 லெப்டினன்ட்களையும், 23 பிரிகேடியர்களையும் தந்துள்ளது. 45 கர்னல்கள் தற்போது பணியில். ஊரில் 22 தெருக்கள். ஒவ்வொன்றும் ஒரு ஜவானின் பெயரில்!
இங்குள்ள ‘முன்னாள் படைவீரர் சேவைக் குழு’ ராணுவ ஆட்சேர்ப்புத் தேர்வுகளை எழுத இளைஞர்களை ஊக்குவிக்கிறது, வழி நடத்துகிறது. முன்னாள் படைவீரர்களால் உருவாக்கப்பட்ட ‘மத்யா’ என்ற கிராமப்புற ராணுவப் பயிற்சி மைதானம் இங்கு உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த மைதானத்தில் பயிற்சி அளிக்கிறார்கள்.
துணிச்சலான வீரர்களைப் பெற்றெடுக்கும் இவ்வூர் தாய்மார்கள் எல்லாவற்றையும் தெய்வத்திடம் விட்டு விடுகிறார்கள். ராணுவத்தில் சேரும் ஒவ்வொரு பிள்ளையையும் காமாக்யா அம்மன் பாதுகாப்பதாக இந்த கிராமத்தினருக்கு நம்பிக்கை. கஹ்மரைச் சேர்ந்த தாய்மார்கள் தங்கள் மகன்களை வீரர்களாக வளர்ப்பதாக சபதம் எடுத்துள்ளனர்.
1965-ல் பாரத − பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் பின்னர் போர்களில் தியாகியாகவில்லை. கஹ்மரை ‘வீரர்களின் கிராமம்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தம் அல்லவா?