கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டம் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு செல்லும் சாலையை அங்கிருந்த ஊழியர்கள் சேதப்படுத்திவிட்டு, ஆவணங்கள், ரசீதுகள் உள்ளிட்டவற்றுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் அமலாக்கத் துறையினர் சோதனையிடாமல் திரும்பிவிட்டனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட்ட நன்னியூர், மல்லம்பாளையத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, குவாரியில் உள்ள மணல் இருப்பு, அனுமதிக்கப்பட்ட இடத்தில் மணல் எடுக்கப்பட்டதா, அனுமதிக்கப்பட்ட அளவு மணலைவிட அதிகமாக எடுக்கப்பட்டதா என்று அளவீடு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்பட்டதா எனவும் ஆய்வு நடத்தினர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள ஒருவந்தூரில் காவிரிஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு எடுக்கப்படும் மணல், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள கிடங்கில் சேகரிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இங்கு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஒருவந்தூர் குவாரி மற்றும் செவிட்டுரங்கன்பட்டி மணல் சேமிப்புக் கிடங்கில் கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பது தொடர்பாக அமலாக்கத் துறையினர்நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.