உலகின் முக்கிய உயிரியல் பொருளாதாரமாகும் பாரதம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வேகமாக வளர்ந்து வரும் பயோடெக் ஸ்டார்ட்அப்களுடன் உலகின் முக்கிய உயிரியல் பொருளாதாரமாக பாரதம் வளர்ந்து வருகிறது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். டெல்லியில் உள்ள பாரத வாழ்விட மையத்தில் இன்று நடைபெற்ற அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டர்பிரைசசின் (ABLE)  20வது ஆண்டு விழாவின் தொடக்க உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், “மிஷன் கோவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் பாரதம் இரண்டு வருடங்களில் நான்கு உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கி உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளது. கோவாக்ஸின் மற்றும் எதிர்கால தடுப்பூசிகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளதால் நம் நாடு தொற்றுநோய்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2022ல், பாரதம் 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாம் இப்போது முதல் 25 இடங்களுக்குள் இருக்க வேண்டும். பாரதம் அதன் 100வது சுதந்திர நாளை கொண்டாடும்போது முதல் ஐந்து இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே இலக்கு. ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் என்ற நாட்டின் பசுமையான முழக்கத்தில் ஜெய் அனுசந்தனை சேர்ப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுமைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கியுள்ளார். பாரதம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. வேகமாக வளரும் யூனிகார்ன்களின் தாயகமாக உள்ளது. புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் ஸ்டார்ட்அப்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று பாரதத்தின் பெண்கள் உட்பட இளம் திறமையாளர்கள் ஸ்டார்ட்அப்கள் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ செழிப்பான கண்டுபிடிப்பு வாயிலாக பொருளாதாரத்திற்கான வெற்றியின் கதையை எழுதுகிறார்கள். முந்தைய ஆட்சியில், கொள்கை முயற்சிகளிலும் ஆட்சியிலும் புதுமைக்கான சூழல் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் புதுமைக்கான சூழ்நிலையை வழங்குவதால் பாரதம் முன்னேறி வருகிறது. இந்திய தொழில்துறையானது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. தொழில்நுட்ப இயக்கத்தில் புரட்சியை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன” என கூறினார். மேலும், 2030ம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் உயிரியல் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும் சுதந்திர நூற்றாண்டு விழாவில் 1 டிரில்லியன் டாலர் உயிரியல் பொருளாதாரம் என்ற இலக்கை பார்தம் அடைய உதவுமாறு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார்.