இறை நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும், சிவனின் தரிசனம் கிட்டவில்லை; அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை. கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து, வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு, புதிய விஷ்ணு சிலையை வைத்து, பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி, ஊதுவத்தி, ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன், சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி, பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான். கட்டிய அடுத்த நொடி, சிவன் அவன் கண் முன் தரிசனம் தந்தார். வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான்; “இத்தனை நாட்கள் உன்னை பூஜித்தபோது காட்சிய ளிக்காத நீ, இப்பொழுது காட்சி தருவது ஏன்?”

“பக்தா! இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ உணர்ந்த அந்த நொடி, நான் உன் கண் முன் வந்து விட்டேன்…” என இறைவன் பதிலளித்தார்.