இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால் நம் நாடு பிச்சை எடுக்கிறது – பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வலதுசாரி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்லின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் பேசுகையில், “1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாற இலக்குநிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதைத் தடுக்க பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. 2024-25 நிதி ஆண்டில் 7 சதவீத வளர்ச்சியை எட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானைப் பாருங்கள். பாகிஸ்தானில் வளர்ச்சியே இல்லை. தேக்கம்தான் இருக்கிறது. சில சக்திகள் நம் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றன. அரசியல்தலைவர்களான நாம் பொம்மை போல் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த உரிமைஇருக்கிறது. அவற்றால் அரசையும் அமைக்க முடியும்” என்றார்.
பாகிஸ்தான் கடும் பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களைக் கூட இறக்குமதிசெய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால், உணவு, மருந்து,எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் தீவிரமாககாணப்படுகிறது. அதேபோல், அரசியல் தளத்திலும் பாகிஸ்தானில் குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்றது. இம்ரான் கானின்பிடிஐ கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
அவர்கள் அதிக இடங்களில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில்நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்- என் கட்சியும் முன்னாள்வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பிபிபி கட்சியும் இணைந்து புதிய அரசை அமைத் தன. ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப் புத் தெரிவித்து வருகின்றன.