ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நேர்காணல்

தாங்கள் ஒரு ஸ்வயம்சேவகராகவும், சங்கத்தின் சர்சங்சாலக்காகவும் சங்கத்தின் 100 ஆண்டுக்காலப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் ஆழ்ந்து யோசித்து அதன் பின் சங்கத்தை தொடங்கினார். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது பரிசோதனை செய்து பார்த்து தீர்மானிக்கப்பட்டது; அந்த தீர்வு சரி என்பது நிரூபிக்கப்பட்டது. சங்கத்தின் செயல்முறை பயன் தருகிறது என்பதையும், சங்கம் அதன் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்பதையும் அனுபவபூர்வமாக கண்டுணர 1950 வரை ஆனது. அதன் பிறகு நாடு தழுவிய அளவில் சங்கத்தின் விரிவாக்கமும், ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தில் நாலாபுறமும் பரவிச் செல்வதும் தொடங்கியது.

அடுத்த 4 தசாப்தங்களாக, ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தங்கள் பணி, நட்புள்ளம், நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படையில் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற்றனர். 1990 க்குப் பிறகு, இந்த சிந்தனை, இந்த பண்பு நலன் ஆகியவற்றின் அடிப்படையில் தேசத்தை நிர்வகிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர். இந்த சிந்தனையையும் பண்பின் தரத்தையும் முழு சமுதாயமும் ஏற்றுக்கொண்டு அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, நேர்மையுடனும் தன்னலம் இல்லாமலும் தேசத்திற்காக உழைத்து இதை மகத்தான தேசம் ஆக்க வேண்டும்;  அது தான் இப்போது நம் முன் உள்ள பணி.

விஜேத்ரீ ச ந:ஸம்ஹதா கார்யசக்திர்                           விதாயஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்‌ஷணம்

பரம் வைபவம் நேதும் ஏதத் ஸ்வராஷ்ட்ரம்                             ஸமர்த்தா பவத்வா சிஷாதே ப்ருசம்

இதன் பொருள், நல்லோரை உருவாக்கி ஒருங்கிணைக்கும் பணி எதிர்காலத்திலும் தொடரும் என்பதே. நம் சிந்தனை துல்லியமானது, ஒருங்கிணைப்புப் பணி அவசியம்; இதை அனைவரும் உணரச் செய்வோம்; தேசத்தை அதி உன்னதமான நிலை காணச் செய்வதில் சமுதாயமே முனைந்திடச் செய்வோம். இது நமது பொறுப்பு.

இந்த 100 ஆண்டு பயணத்தில் முக்கியமான கட்டங்கள் என்னென்ன?

சங்கத்திடம் வாய்ப்பு வசதி எதுவும் இருக்கவில்லை. சங்க சிந்தனைக்கு அங்கீகாரம் இல்லை, பரப்புவதற்கான கருவி இல்லை, சமுதாயத்தில் புறக்கணிப்பும் எதிர்ப்பும் மட்டுமே இருந்தன. கார்யகர்த்தாக்களும் இல்லை. இந்தத் தகவல்களை கணினியில் பதிவு செய்தால், சங்கம் பிறந்த உடனே இறந்துவிடும் என்று அது கணிக்கும். ஆனால் தேசப் பிரிவினையின் போது, ஹிந்துக்களை பாதுகாக்கும் சவாலான பணியை சங்கம் ஏற்றது; சங்கத்தின் மீதான தடையின் போது கடினமான சிரமங்களையும் சமாளிப்பதில் சங்கம் வெற்றி பெற்றது. சங்கத்தின் பணி தொடரும், வளரும் என்பது 1950 வாக்கில் நிரூபிக்கப்பட்டது. சங்க முறையின் மூலம் ஹிந்து சமுதாயத்தை ஒழுங்கமைக்க முடிகிறது. ஒரு வகையில், தடை சங்கத்திற்கு பயனளித்தது, ஏனென்றால் நமது  திறன்களை நாம் உணர்ந்தோம், சங்க வளர்ச்சியின் அளவிற்கு ஏற்ப சமுதாய வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் ஸ்வயம்சேவகர்கள் பணியாற்றத் தொடங்கினர். சங்கம் முன்பை விட அதிகமாக விரிவடைந்தது.
1975ன் நெருக்கடி நிலையின் போது சங்க பங்களிப்பின் காரணமாக சங்க சக்தியின் முக்கியத்துவம் சமுதாயத்தின் கவனத்திற்கு வந்தது. நல்ல நல்ல மனிதர்கள் முடங்கிக் கிடந்த வேளையில் ஸ்வயம்சேவகர்கள் அச்சமின்றி முழு நம்பிக்கையுடன் பணியாற்றினார்கள். அடுத்து ஏகாத்ம ரத யாத்திரை (கங்கை யாத்திரை) வந்தது; காஷ்மீர் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினோம், ராமர் கோயில் இயக்கம்,  விவேகானந்தர் 150 வது ஜெயந்தி போன்றவற்றாலும், நமது சேவைப் பணிகளின் பெருமளவிலான விரிவாக்கத்தாலும் சங்க சிந்தனை பற்றியும் சங்கம் பற்றியும் சமுதாயத்தில் நம்பிக்கை வெகுவாகப் பரவியது.

1948லும் 1975லும்  சந்தித்த நெருக்கடிகளிலிருந்து அமைப்பு என்ன கற்றுக்கொண்டது?

இந்த இரண்டு தடைகளையும் விதித்ததன் பின்னணியில் அரசியல் இருந்தது. சங்கத்திற்கு எந்தத் தீங்கும் இல்லை, சங்கத்திற்கு நன்மைதான் ஏற்படும் என்பது தடை விதித்தவர்களுக்குக் கூட தெரியும். இவ்வளவு பெரிய சமுதாயத்தில் கருத்துக்களின் போட்டி சகஜம்; அதன்  நடுவே தங்கள் அரசியல் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட அதிகார பீட நபர்கள், சங்கத்தை தடை செய்தார்கள். முதல் தடையின் போது எல்லாமே சங்கத்திற்கு எதிரானவையாக இருந்தன. சங்கம் அழிந்து போயிருக்கும். ஆனால் என்னதான் குந்தகம் ஏற்பட்டாலும்  சங்கம் தடை கடந்து மீண்டது, அடுத்த 15−20 ஆண்டுகளில், அது முன்பு இருந்ததைப் போலவே மாறியது, அதன் முந்தைய நிலையை விடவும் வலுவாகியது.

சங்க ஷாகாக்களை மட்டுமே நடத்தி வந்த, சமுதாயத்தின் செயல்பாடுகளில் பெரிய பங்கு வகிக்காத ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தின் பிற செயல்பாடுகளிலும் பங்கேற்று, அங்கு தங்கள் பின்னணி நிலவுவதை உறுதி செய்யத் தொடங்கினர். 1948ன் தடை வாயிலாக சங்கத்திற்கு கிடைத்த நன்மை, என்றால், நமக்கு நம் வல்லமை தெரிய வந்தது; சமுதாயத்திலும் அமைப்புகளிலும் மாற்றம் கொணரும் பாதையில் திட்டமிட்ட ரீதியில் ஸ்வயம்சேவகர்கள் முன்னேறி முன்னணி வகித்தார்கள். சங்கப் பணி என்பது ஒரு மணி நேர ஷாகா வேலை மட்டுமே அல்ல,  மீதி 23 மணி நேரத்தில், ஸ்வயம்சேவகரின் தனிப்பட்ட / குடும்ப / பொதுவாழ்க்கை / பணியிட நடவடிக்கைகளில் சங்க பண்புப் பதிவும் பிரதிபலிக்க வேண்டும் என்பது சங்கத்தின் எதிர்பார்ப்பு.  பின்னர் 1975ம் ஆண்டு தடை செய்யப்பட்டபோது, சங்கத்தின் இந்த விரிவான கண்ணோட்டத்தின் சக்தியை சங்கம் உனர்ந்தது. நல்ல நல்ல மனிதர்கள் எல்லாம் விரக்தியில் முடங்கியபோது, சாதாரண ஸ்வயம்சேவகர் கூட இந்த நெருக்கடி தீர்க்கப்பட்டு, நாம் அனைவரும் அதிலிருந்து பாதுகாப்பாக வெளிவருவோம் என்று நம்பிக்கையுடன் நினைத்தனர்.

1975ன் நெருக்கடி நிலையின் போது சங்கம் தன் தடையைப் பிரச்சினையாக்காமல், ஜனநாயகத்தைப் பாதுகாக்க பாடுபட்டது, சங்கத்தை விமர்சிப்பவர்களை ஆதரித்தது. அந்த காலகட்டத்தில், சங்கம் சமுதாயத்தில், குறிப்பாக சிந்திக்கும் பழக்கமுள்ளவர்களிடையே ஒரு நம்பகமான சித்தாந்த நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. நெருக்கடி நிலையிலிருந்து சங்கம் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக வெளிப்பட்டது.

ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் சங்கத்தில் முக்கியமானவர், ஆனால் இந்த முழு பயணத்திலும் சில ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிய பணி, அவர்களின் செயலாற்றல் குறிப்பிடத்தக்கதாக  இருந்திருக்குமே, அத்தகையவர்கள் பற்றி சொல்லுங்கள்.

இப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருமுறை நான் ஸ்ரீ குருஜியிடம் ‘உங்களுக்குப் பிறகு யார்?’ என்று கேட்டேன். “இந்தக் கேள்வி சங்கத்தில் எழுவதில்லை. ‘உங்களுக்குப் பிறகு யார்?’ என்று கேட்கிறீர்கள். ‘நீ ஏன் கூடாது?’ என்கிறேன்!” என அவர் சொன்னார், இது விக்ரமாதித்தன் அரியணை. இங்கே, சங்கத்தின் திட்டத்தின்படி, யார் எங்கு அமர வேண்டுமோ அங்கு அமர்ந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். ஸ்வயம்சேவகர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைச் சமாளிக்கத் தன்னைத் தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்கிறார்; சாத்தியமான எல்லா வழிகளிலும் முயன்று பணி முடிக்கிறார்.

சங்க ஊழியர்களின் முதல் தலைமுறையில் ஸ்ரீ குருஜி, ஏக்நாத் ரானடே, மாதவராவ் முளே, பாபாசாகேப் ஆப்தே, தாதாராவ் பர்மார்த், யாதவராவ் ஜோஷி, வசந்த்ராவ் ஓக், பாளாசாகேப் தேவரஸ், பாவுராவ் தேவரஸ் உள்ளிட்டோர் அடங்குவர், மேலும் குடும்பஸ்தர்களில் அப்பாஜி ஜோஷி, பாபாராவ் பிடே, லிங்கய்யா சௌத்ரி, லிங்கய்யா சௌதரி, லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா, பாரிஸ்டர் நரேந்திரஜித் சிங், பீகாரின் பபுவாஜி என  60-−70 பேர் கொண்ட ஒரு குழு இருந்தது. டாக்டர் ஹெட்கேவார் எதிர்பார்த்தது போலவே, அவர்கள் தனது ரத்தத்தை வியர்வையாக்கி நம் சங்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்; சங்கத்தை அனைத்து தடைகளிலிருந்தும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, ஸ்வயம்சேவகர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணி தொடங்கினர். அவர்களில் சிலர்: தத்தோபந்த் டெங்கடிஜி, தீன்தயாள்ஜி, அடல்ஜி, நானாஜி தேஷ்முக், கிசான் சங்கத்தை நிறுவிய பாபுராவ் பைத், பாவுசாகேப் புஸ்குடே, வித்யார்த்தி பரிஷத்தில் யஷ்வந்த்ராவ் கேல்கர், தத்தாஜி டிடோல்கர், கிரிராஜ் கிஷோர் ஆகியோர். அவர்களில் பலர் அந்த நேரத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை ஊழியர்களாக இருந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுக்கப்பட்டு, அவர்கள் அதை வளர்த்தெடுத்தார்கள்.

தங்கள் பணி வாயிலாக அந்தந்தப் பகுதியில் சங்க சிந்தனை, சங்க முறை, சங்க பண்புப் பதிவு இவை எப்படி இருக்கும் என்று காட்டினார்கள். பின்னர் பிரச்சாரங்கள், இயக்கங்கள்  எல்லாம் வந்தன. இதை சொல்லும் போது, மோரோபந்த் பிங்களேஜியின் பெயர் உடனடியாக நினைவுக்கு வருகிறது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, மோரோபந்த்ஜி கென்யாவில் சுற்றுப்பயணம் செய்தார். சகஜமாகவே அவர் நகைச்சுவை உணர்வுள்ளவர். அங்கிருந்து திரும்பிய பிறகு, கென்யாவில் நடந்தது பற்றி அவர், சொன்னது இது: அந்நாட்டு அரசு நெறிமுறைகளின்படி, ஒரு அரசாங்க அதிகாரி இவரை  சந்திக்க வந்தார்; அவர், “திரு. பிங்கிளே எங்கள் வரிசையில் ஒன்றாவதும் இரண்டாவதும்  வர முடியவில்லை. என்னுடைய எண் ஐந்தாவது” என்றாராம்.. “கவலைப்படாதீர்கள், சங்க அதிகாரிகள் வரிசையில் என்னுடைய எண் ஏழாவது” என்று மொரோபந்த்ஜி பதிலளித்தாராம்.

ஆனால் 1980கள் தொடங்கி  நடந்த பெரிய இயக்கங்களுக்குப் பின்னால் (அது சரஸ்வதி நதி ஆராய்ச்சி, கங்கை யாத்திரை, அல்லது ராம ஜென்மபூமி மீட்பு இயக்கம் என எதுவானாலும் அதில்) – மோரோபந்த்ஜி இருந்தார், அசோக்ஜி சிங்கல் இருந்தார். அப்படிப்பட்ட எத்தனை பேரைக் கணக்கிட வேண்டும்? நாம் பெயர்களை பட்டியலிட்டால், எத்தனையோ பேர் விடுபட்டுப் போவார்கள். சங்கம் எந்த ஸ்வயம்சேவகருக்கு வேலை கொடுத்ததோ, அவர் அந்த வேலையைச் செய்துகாட்டினார். நம்மை ஒரு சூழ்நிலையில் வைக்கிற கடவுள் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் சக்தியையும் நமக்குத் தருகிறார் என்பார்கள். அதேபோல், ஸ்வயம்சேவகருக்கு பொறுப்பு வழங்கும் சங்கம் அவருக்கு சக்தியும் தருகிறது. இப்படிச் சொல்வதே உத்தமம்; யாருக்கும் அநீதி ஏற்படாது.

சங்கம் எங்கும் பரவி, எண்ணிக்கை ரீதியாகவும் வளர்ந்து வருகிறது. எனினும் பணியின் தரம் அதிகரிக்கிறது; ஸ்வயம்சேவகர் தரம் வளர பயிற்சி அளிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன?

தரம், சங்க்யா (எண்ணிக்கை) இரண்டையும் பொறுத்தவரை, சங்க்யா அல்லாமல் தரத்தை மட்டுமே அதிகரித்தால் அல்லது தரத்தை அல்லாமல் சங்க்யாவை மட்டுமே அதிகரித்தால், தரம் அதிகரிப்பதோ சங்க்யாவை நிலைநிறுத்துவதோ சாத்தியமில்லை. இதை கருத்தில் கொண்டுள்ள சங்கம் முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை முன்னரே மனதில் கொண்டுள்ளது, ஆனால் ஒருங்கிணைத்தல் என்பதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒரு நபரை எவ்வாறு தயார்படுத்துவது, பல நபர்களின் கூட்டமைப்பு அல்லது சங்கம் எப்படி இருக்க வேண்டும், ‘நாம்’ என்ற உணர்வு எப்படி அமையும் என்பதற்கு சில தரநிலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தரங்களை மீறாமல், தரநிலைகளில் சமரசம் செய்யாமல் நாம் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இதன் பொருள் எவரையும் சங்கத்திலிருந்து விலக்கி வைப்பது அல்ல. ஒரு பெரிய அமைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சம்பவம்: சோஷலிச சித்தாந்தத்தைக் கொண்ட ஒருவர் அந்த அமைப்பில் ஊழியர் ஆனார். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் முதல் முறையாக பயிற்சி வகுப்பிற்கு வந்தார். சிகரெட் என்ன, அங்கே யாரும் பாக்கு கூட போட்டுக் கொள்வதில்லை. அவர் நாள் முழுவதும் சங்கத்தில் நெளிந்தார். இரவில் படுக்கையில் படுத்தபோது தூக்கம் வரவில்லை. இதற்கிடையில் அமைப்பு செயலர் பார்த்தார். “உங்களால் தூங்க முடியவில்லை என்றால் வெளியே போகலாம் வாருங்கள்; சற்று நடைப்பயிற்சி செய்வோம்” என்று சொல்லி அவரை வெளியே அழைத்துச் சென்று, அந்த புதிய நபரிடம் தெருக்கோடியில் சிகரெட் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மனசுக்கு நிறைவாக புகைத்துவிட்டு திரும்பி வாருங்கள். வகுப்பினுள் சிகரெட் கிடைக்காது என்றார். அந்தப் புதிய அன்பர் அமைப்பில் நீடித்தார்; பிறகு மிகச் சிறந்த ஊழியரானார்; புகைபிடிப்பதைக் கூட விட்டுவிட்டார். அவர் அந்த அமைப்பை அந்த மாநிலத்தில் மிக அருமையாக வளர்த்தார்.

எவர் ஒருவரும் அவர் இருப்பது போலவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த நெகிழ்வுத்தன்மையை நாங்கள் பராமரிக்கிறோம். ஆனால் நாம் விரும்பும் விதத்தில் அவரை உருவாக்குவதற்கான கனிவான பரிவு என்ற கலையும் நம்மிடம் உண்டு. அந்த துணிவும் ஆற்றலும் நமக்கு உண்டு. அதனால் சங்க்யா அதிகரித்ததுடன் தரமும் நிலைத்தது. நமக்கு வேண்டியது சங்க்யா, ஆனால் தரத்துடன் கூடிய சங்க்யா. தரத்துடன் கூடியதாக சமுதாயம் முழுவதையும் மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோர் நாம்.

− இந்தப் பேட்டியின் தொடர்ச்சி
வரும் இதழ்களின் வெளிவரும்