ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் எனமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மத்திய தேர்தல் ஆணையம், ஆந்திர மாநிலதலைமை செயலாளர் ஜவஹர் ரெட்டி மற்றும் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா ஆகியோரை அழைத்து நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? ஏன் இவ்வளவு அலட்சியம்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 12 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2 பேர் இடமாற்றத்துக்கு உள்ளாயினர்.

இதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி வினித் ப்ரிஜ்லால் தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து இக்குழு கடந்த 2 நாட்களாக திருப்பதி, அனந்தபூர் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தது. 48 மணி நேர ஆய்வுக்கு பின்னர் நேற்று மாலை ஆந்திர மாநில டிஜிபிக்கு 150 பக்க ஆய்வறிக்கையை அந்த குழு வழங்கியது.

பின்னர் விசாரணை அதிகாரி வினித் ப்ரிஜ்லால் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஆந்திராவில் மொத்தம் 33 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதனை கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ் அதிகாரிகளே பல இடங்களில் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். வழக்குகள் கூட பதிவு செய்யாமல் உள்ளனர். நடந்த சம்பவங்கள்அனைத்திலும் சேகரிக்கப்பட்டசாட்சியங்கள், பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1,370 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல்வாதிகள், போலீஸாரும் அடக்கம். ஆனால், இதுவரை வெறும் 124 பேர் மீது மட்டுமேவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும்விசாரணை நடத்த இன்னமும் சில நாட்கள் தேவைப்படுகின்றன. இது முதல் கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கை மத்திய, மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.