அழகிப் போட்டி

ஒரு முறை அப்துல் கலாம், பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடந்தது. அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம், “ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.

ஒரு மாணவி “அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்” என்கிறாள். அவருக்கு பதிலில் திருப்தி இல்லை, அடுத்த மாணவி “அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்” என்றாள். அதிலும் அவருக்கு சம்மதமில்லை. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.

கடைசியாக, அந்த சிறுமி எழுகிறாள் “ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்”.. என்றாள். அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்டது. அது அப்துல் கலாமின் கைத்தட்டல்…

அப்போது பேசிய அப்துல் கலாம், “குட்..! இதுதான் உண்மையான பதில். அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு? அதற்கு முன், நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? கனிவான அன்பும், தளராத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே? அந்த நம்பிக்கை தானே அழகு!” என்றார்.

அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகியது…

படித்ததில் ரசித்தது…