அராஜக தர்பார்கள் கொட்டம் ; பாயட்டும் தேசத்தின் சட்டம்!

அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் பகுதியாக (‘பஞ்ச பரிவர்த்தன்’ அம்சமாக) மக்களிடையே வலியுறுத்தி வருவது பாராட்டுப் பெற்று வருகிறது. மறுபுறம், நீதிமன்ற உத்தரவுக்குத் தலைவணங்காத அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள். இது விபரீதம். அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிமொழி எடுத்து ஆட்சியில் அமர்ந்து, சட்டத்தை எட்டி உதைக்கும் விதமாக நடந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சென்ற வாரம் தேசத்தை திடுக்கிடச் செய்தார்.

 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஈ.டி (அமலாக்கத் துறை) கொல்கத்தா ஐ-பேக் நிறுவனத்தில் 2026 ஜனவரி 8 (வியாழக்கிழமை) அன்று சோதனை நடத்திய போது, அதிரடியாக மம்தா, தனது அரசின் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தி, ஆவணங்களை தன்னிச்சையாக எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு.

(நிலக்கரிச் சுரங்க ஊழலில் அடிபட்ட ஹவாலா புள்ளிகளில் ஒருவரான பிரதீக் நடத்தும் ஐ-பேக் நிறுவனத்திற்கு தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா மூலம் மாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது; இதையடுத்து ஐ-பேக் நிறுவனம் வெளிச்சத்திற்கு வந்தது). அட்டூழியம் ஒன்றும் மம்தாவிற்கு புதிதல்ல.

தனது அனுமதியில்லாமல், சிபிஐ தங்கள் மாநிலத்தில் எந்த விசாரணையையும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டவர்தான் இவர். இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் உலா வந்த பயங்கரவாதிகள், மாநில காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை. மாறாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்.ஐ.ஏ) மூலம் மட்டுமே கைது நடந்து வழக்கு தொடுக்கப்பட்டது.


குறிப்பாக, ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக திருணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை (ஈ.டி) அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல், அவரது ஆதரவாளர்களும் மம்தா கட்சியினரும் தடுத்து அவர்களைத் தாக்கினார்கள்.

ஷாஜகான் ஷேக் தலைமறைவானார். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறி, ஷாஜகான் ஷேக் வீட்டின் முன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மம்தா அரசு குற்றச்சாட்டை மறுத்தது. 55 நாட்களுக்கு பிறகு ஷாஜகான் ஷேக் சரணடைந்தார். வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தான் மம்தா சட்டத்தை மதிக்கும் லட்சணம்.

பல்வேறு வழக்குகளில் பயங்கரவாதிகளை கைது செய்தது, மம்தா அரசின் காவல்துறையினர் அல்ல. மூர்ஷிதாபத்தில் ஆறு அல்-கொய்தா பயங்கரவாதிகளை கைது செய்ததும், சீல்டாவில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் / ஜமாத் முகமது பங்களாதேஷ் பயங்கரவாதிகள் நான்கு பேரை கைது செய்ததும் உதாரணங்கள்.

2009-ல் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான யாசின் பட்கல்லை கொல்கத்தாவில் கைது செய்ததும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தான். (மேற்கு வங்க அரசு ஒரு சிறு திருட்டு குற்றச்சாட்டு மட்டும் சுமத்தி, ஒரு மாதத்தில் யாசின் பட்கலை வெளியே விட்டிருந்தது!).

2023 ல் மேற்கு வங்கத்தில் பதுங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் நபர்கள் கைது, ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு, கயா குண்டு வெடிப்பு தொடர்புள்ள பயங்கரவாதிகள் கைது எல்லாம் செய்தது என்.ஐ.ஏ தான் (தமிழகத்தில் ‘உள்ளூர் போலீசுக்கு தெரியாத’ பல பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ வந்து தூக்கிய செய்திகள் ஞாபகம் வருதா?)

தமிழக தர்பாரில்

மேற்கு வங்கத்தில் அரங்கேற்றப்படும் மத்திய-மாநில மோதல் என்ற பூச்சாண்டி, தற்போது தமிழ்நாட்டிலும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தலைதூக்குகிறது. இது தேசப் பாதுகாப்பிற்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் விடப்படும் சவால். தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் மம்தா தர்பாரின் ஈயடிச்சான் காப்பி. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை (ஈ.டி) அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்தது. அப்போது மாநில போலீசாருக்கும், ஈ.டி அதிகாரிகளுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. ஈ.டி அதிகாரி தாக்கப்பட்டார்.

மணல் குவாரி தொடர்பான வழக்குகளில், தமிழகத்தின் பல மாவட்ட ஆட்சியர்களுக்கு ஈ.டி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றது. “மாநில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது மாநில தன்னாட்சியைப் பாதிக்கும்” என்ற தமிழக அரசு வாதத்தைப் புறந்தள்ளிய உச்ச நீதி மன்றம், மாவட்ட ஆட்சியினர் தேசத்தின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோருக்கு எதிரான ஈ.டி நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கல் என திமுக அரசு தொடர்ந்து கூறி, சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவாக சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது. எல்லாம் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என்ற போர்வையில்!


கேரள தர்பாரில்

கேரளாவிலும் இதே போன்ற சூழல்தான். தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் செயலர் சிவசங்கரன் கைதானபோது, கம்யூனிஸ்டு அரசுக்கும் மத்திய அமைப்புகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. மாநில அரசின் சில நிதி திட்டங்களை மத்திய அமைப்புகள் ஆய்வு செய்வதற்கு, மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுவும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதை காம்ரேடுகள் தலையில் குட்டி எடுத்துச் சொல்வது அவசியம்.

மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும், ஒன்றுபோலத்தான். சட்ட விரோதமாக குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசின் மீது பாய்வதும், தெருவில் இறங்கிப் போராடுவதும், ஈ.டி, வருமான வரித்துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துவதும், முடிந்தால் தாக்குவதும் என அராஜகம் தூண்டுவதும் வடிகட்டிய அக்கிரமம்.

மு.க.ஸ்டாலின் தர்பாரிலோ ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது, அறிக்கைகள் மூலம் கண்டனம் தெரிவிப்பது, கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொண்டு, ஈனத்தனமாக மத்திய அரசை, குறிப்பாக மோடியை, சம்பந்தமே இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்.ஸை விமர்சனம் செய்வது எல்லாம் முழுமூச்சில் நடக்கிறது.

எல்லாம் தாங்கள் செய்த குற்றத்தின் ஆதாரங்களை மறைக்க என்பது தெளிவாகி வருகிறது. ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, இவர்கள் மத்திய-மாநில உறவு சீர்கெடுவதாக புலம்பித் தீர்க்கிறார்கள். ஈ.டி, வருமான வரித்துறை இரண்டும் மத்திய அரசின் ஏஜெண்டுகள் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைப்பது, குற்றவாளிகளை காப்பாற்றும் தந்திரமே.

ஒரு நபர் மீது ஊழல் அல்லது மோசடி வழக்கு இருந்தால் மட்டுமே ஈ.டி விசாரிக்க முடியும். ஆனால், மாநில அரசு அந்த வழக்கை முடித்து வைத்தாலும், ஈ.டி தனது விசாரணையைத் தொடர முடியும் என்பது மாநிலங்களுக்கு அதிருப்தியைத் தருகிறது.

அதிருப்தி ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், அகப்படுவோர் 95 சதவீதம் அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியினரும்! மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் சட்டம் -ஒழுங்கு விவகாரங்களில் ஈ.டி நேரடியாகத் தலையிடுவது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என மம்தா / ஸ்டாலின் போன்றோர் வாதிடுகின்றனர். மோசடி செய்யும் ஊழல்வாதிகளை பாதுகாப்பது என்ன தத்துவமோ? பதில் இல்லை.