அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு

”தி.மு.க.,வில் முதல்வர் குடும்பம் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் மட்டத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது,” என, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அவர் கூறியதாவது:

தி.மு.க.,வில் முதல்வர் குடும்பம் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் மட்டத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது. பெரம்பலுாரில் நேரு மகனை வேட்பாளராக முடிவு செய்து விட்டனர். பா.ஜ.,வில் மிகப்பெரிய பொறுப்பில் இல்லாதவர்கள் தான் முதல்வர், துணை முதல்வர் ஆகியிருக்கின்றனர். பா.ஜ., மட்டுமே ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி என்பது மக்களுக்கு புரிந்து விட்டது.

வரும் தேர்தல், பா.ஜ., மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகள் என்று தான் இருக்கும். மின்னணு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்பதை இந்த தொகுதி எம்.பி., கார்த்தி ஏற்றுக்கொண்டார். தேர்தல் கமிஷன் பகிரங்க அறிவிப்பு செய்தும் கூட, அதில் யாராலும் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முடியவில்லை. அண்ணாமலையின் யாத்திரைக்கு வரும் கூட்டம் நிச்சயமாக ஓட்டுகளாக மாறும்.

டில்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே கிடையாது; அவர்கள் அனைவரும் வியாபாரிகள், மண்டி உரிமையாளர்கள். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் கைகளில் அவர்களுக்கான ரிமோட் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.