அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அலிகான் மகமுதாபாத் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். உச்சநீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். இதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அலிகான் மகமுகாபாத் அரசியல் பின்புலம் கொண்டவர். அவரது குடும்பம் அரசியலில் ஆழமான தொடர்புடையது. அதுமட்டுமல்லாமல் அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். பிரிவினைவாதத்தையும், பிளவு வாதத்தையும் முதன்மைப்படுத்திய அகில இந்திய முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவருடன் அலிகான் மகமுதாபாத்தின் தாத்தாவுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. குறிப்பாக முகமது அலி ஜின்னாவின் நிழலாகவே அவர் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் லீக்கின் பொருளாளராகவும் அவர் இயங்கி உள்ளார்.
1957ல் மகமுதாபாத் ராஜா பாகிஸ்தான் குடியுரிமை பெற்று விட்டார். ஆனால் அவரது மனைவியும், மகனும் பாரதத்திலேயே தங்குவதென முடிவு செய்து விட்டனர். அலிகான் மகமுதாபாத்தின் தந்தை முகமது அமீது முகமது கான் எனப்படும் மகமுதாபாத் ராஜாசாஹீப் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இருமுறை எம்.எல்.ஏ ஆகி உள்ளார். அலிகான் மகமுதாபாத், ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதியமைச்சர் ஹசீப் டிரபுவின் மகளை திருமணம் செய்துள்ளார். 2019 முதல் 2022 வரை சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அலிகான் மகமுதாபாத் செயல்பட்டுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தெளிவாக எடுத்துரைத்தனர். இதை அலிகான் மகமுதாபாத் மிகக் கடுமையாக விமர்சித்தார். பெண்கள் இருவரும் சொல்வது சிறப்பானதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இவை யாவும் நடைமுறைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இது சந்தர்ப்பவாதம் ஆகி விடும். ராணுவத்தின் சார்பில் இரு பெண்களை பேச அனுமதித்துள்ளனர். இது வெறும் அடையாளமாகவே கருதப்பட வேண்டும் என்றெல்லாம் அலிகான் மகமுதாபாத், தாறுமாறாக விமர்சித்துள்ளார்.
இந்த விமர்சனம் ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் உள்ளதுடன் அரசியல் சாசனப் பிரிவு 14ம் 15ம் அனுமதித்துள்ள பாலின சமத்துவத்துக்கு எதிரானது.
ராணுவ நடவடிக்கைக்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தைப் பூச அலிகான் மகமுதாபாத் முற்பட்டுள்ளார். இது மக்களிடையே பேதத்தை உக்கிரப்படுத்தும் வகையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு இடங்களில் புல்டோசர்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றியதையும் வலிய இழுத்து தேவையில்லாமல் விமர்சித்துள்ளார்.
பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கும் இது ஊறு விளைவிக்கக்கூடாது. நம் நாட்டின் ராணுவத்தை அவமதிக்கும் வகையிலும் பெண் அதிகாரிகளின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் வகையிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆணாதிக்க சிந்தனையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சுருக்கமாகச் சொன்னால் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் பகைமையையும், பதற்றத்தையும் அவர் தூண்டி உள்ளார்.
அசோகா பல்கலைக்கழகம் இஸ்லாமிஸ்ட் அர்பன் நக்சல்களின் கூடாரமாகவே இயங்கி வருகிறது. 2016ம் ஆண்டு இங்கு செயல்பட்டுவரும் அரசியல் அறிவியல் துறையின் ஓர் அங்கமாக ‘அரசியல் தரவுகளுக்கான திரிவேணி மையம்’ தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகமும் இதற்கு உறுதுணையாக உள்ளது. தொடக்க நிதியாக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘அரசியல் தரவுகளுக்கான திரிவேணி மைய’த்தின் இயக்குனர் குழுவில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும் இடம் பெற்றுள்ளார். இந்த மையத்துக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த வெர்னியர்ஸ் அவரது வழிகாட்டியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான ஜெபரலாட்டும் உறுதுணையாக செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் பாரதத்தின் நலனுக்கு எதிரானவர்கள். வெர்னியர்ஸ், ஜெபரலாட் ஆகியோர் பாரதத்தின் எழுச்சிக்கு ஊறு விளைவிப்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் ஜார்ஜ் சோரஸின் ஓ.எஸ்.எஃப், ஹென்ரி லூஸ் அறக்கட்டளை, டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கொள்கை ஆய்வுக்கான மையம் உள்ளிட்டவற்றுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் ஆவர்.
2023ம் ஆண்டு இந்த நபர்கள் பல்வேறு கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த கருத்தரங்குகளில் விஷமக் கருத்துகள் கக்கப்பட்டன. ஹரியானாவில் உள்ள நு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மணிப்பூர் கலவரம், ஹிந்து தேசியம் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வெறித்தனம் போன்றவற்றை அலசுவதாகக் கூறிக்கொண்டு நச்சு எண்ணங்களை விதைத்தார்கள்.
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலையொட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதன் மையத் தலைப்பாக ஹிந்து தேசியவாதம், அயோத்தி, முஸ்லிம்களின் உடைமைகள் அபகரிப்பு என்றெல்லாம் திரிபு வாதங்களை அடுக்கினார்கள். பாரதத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் கேந்திரமாக அசோகா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலிகான் மகமுதாபாத் போன்றோரை களையெடுத்தால்தான் தேசத்தின் இறையாண்மையை உறுதி செய்ய முடியும்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி