ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியில் என்.ஜி.ஓ

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி சிலர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 2018ல் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. போராட்டம் என்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கர வன்முறைகளை கட்டுப்படுத்த, தமிழக காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரானப் போராட்டங்களுக்குப் பின்னால், அந்நிய நாட்டு சதி, உள்நாட்டில் செயல்படும் மதமாற்ற சக்திகளின் சதி போன்றவை இருப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ‘தி அதர் மீடியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ) மீது புகார்கள் வந்துள்ளனவா? என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரன்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், “தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடியா’, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரானப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்துக்கு ரூ. 3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில் ரூ. 2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மீதான குற்றாச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அதற்கு வழங்கப்பட்டிருந்த, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் (எப்.சி.அர்.ஏ) ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.