ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ. 25 கோடி லஞ்சம்?

மும்பையில் கடந்த 2021ம் ஆண்டு, கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் வி.ஐ.பிக்கள் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடியாக அந்த கப்பலில் சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தி பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கையும் களவுமாக பிடிபட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டது. இது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) கண்டுபிடித்தது. மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ. 25 கோடி லஞ்சம் கேட்டது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது. இதில் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு வந்த தகவலையடுத்து, சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக, மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீர் வான்கடே, கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.