வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்துள்ளது.

நாடு முழுதும், 1,364 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதில், 194 வகை பறவை இனங்கள், உலக அளவில் அழியும் நிலையில் இருப்பதாக, பட்டியலிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து வளர்ப்பவர்களும் பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்கான வசதி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களை, வணிக நோக்கில் வளர்ப்பவர்கள், இன பெருக்கம் செய்து விற்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இதற்கான வரைவு விதிகளை, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில், பறவைகள் வளர்ப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சட்டப்படி அனுமதிக்கப்படும் சில வகை பறவைகளை வீடுகளில் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் குறித்த விபரங்களை, அரசுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும். நாய் வளர்க்க உரிமம் பெறுவது போன்று, வீடுகளில் பறவைகளை வளர்ப்போரும், உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவின் அடிப்படையில், அவர்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்படும்.

மேலும், பறவைகளை அடையாளப்படுத்த, அதன் கால்களில் மாட்டுவதற்கான வளையங்கள் வழங்கப்படும். இந்த வளையங்கள் வாயிலாக, பறவைகள் அடையாளப்படுத்தப்படும். வீடுகளில் இந்த பறவைகளை வளர்க்க எத்தகைய இடவசதி ஏற்படுத்த வேண்டும்; உணவு, தண்ணீர் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து, வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தடை செய்யப்பட்ட பறவைகள் எதையும், யாரும் வீடுகளில் வைத்துக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற பறவைகள் தங்களிடம் இல்லை என்பதை உறுதி அளிக்க வேண்டும். இதில், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். இவர்களுக்கு, 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட கிளி, மயில் போன்ற பறவைகளை வளர்ப்பவர்களுக்கு இது பொருந்தும். வரைவு விதிகள் இறுதி ஒப்புதல் பெற்ற பின், இந்த விதிகள் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.