விசிக நிர்வாகி கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ சிலைகள், ஆலயங்கள் உடைக்கப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பெரம்பலூர் காந்தி சிலை அருகே நடைபெற உள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் சுவரொட்டிகள் ஒட்டியும் ஹிந்துக்களை இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். இந்த சூழலில், ஆர்ப்பாட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணசேகரனின் அலைபேசி எண்ணிற்கு மர்ம நபர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்து முன்னணி சார்பில் பெரம்பலூர் மற்றும் அரும்பாவூர், காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வராஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.