ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில் ஒடிசாவில் செமி கண்டக்டர் ஆலை

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 800 ஏக்கரில் மொத்தம் ரூ.2 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் அமைக்க உள்ளது.

முதல்கட்டமாக இந்த முதலீடை செய்யும் பிரிட்டனை சேர்ந்த எஸ்ஆர்ஏஎம் & எம்ஆர்ஏஎம் நிறுவனம், மொத்தம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

இந்த ஆலை அமைப்பது தொடர்பாக ஒடிசா அரசுக்கும், இந்த நிறுவனம் மற்றும் அதன் இந்திய கிளை நிறுவனமான புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆலை அமையும் இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். ஆலை அமைப்பதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து உள்ளது.

இந்த மாவட்டத்தின் அருகில் துறைமுகம், விமான ஓடுபாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ள காரணத்தினால், செமி கண்டக்டர் ஆலை அமைக்க கஞ்சம் மாவட்டத்தை பிரிட்டன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆலைக்கு தேவையான சுத்தமான குடிநீர் மற்றும் எரிசக்தியும் இங்கு கிடைக்கிறது.

முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் இந்த ஆலை துவங்கப்படும். இதனால், நேரடியாக 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். பின்னர் படிப்படியாக 2027 ம் ஆண்டிற்குள் இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.