பேனா நினைவுச் சின்னம் தடை கோரி வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்யன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு சார்பில் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், “கடற்கரை சூழலியல் பாதுகாப்பில் கடல் ஆமைகள் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முட்டையிடும் இடங்களாக கடலோர மணல் பரப்பு உள்ளது. அனால், மணல் பரப்புகள் அழிக்கப்பட்டு வருவதால்  கடல் ஆமைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. சென்னை கடலோர பகுதிகளான நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர்  வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான 14 கி.மீ தொலைவில் கடந்த 8 ஆண்டுகளில் 1,522 கடல் ஆமைகள் இறந்துள்ளன. மெரினா கடற்கரையின் வடக்கு எல்லையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1988ல் மெரினா கடற்கரையின் ஒரு பகுதி மயானமாக அறிவிக்கப்பட்டதால், அந்த இடம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வராது. 3 பேரின் நினைவிடங்களும் அங்கு ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் நினைவிடம் ரூ. 39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நாம் அனுமதித்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை அங்கு நாம் காண நேரிடும். கருணாநிதிக்கு பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 80 கோடியில், 8,551.13 சதுரமீட்டர் பரப்பளவில் 42 மீட்டர் உயர பேனா நினைவிடம் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக மெரினா கடற்கரையில் இருந்து தரை பரப்பில் 290 மீட்டர், கடலில் 360 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பகுதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியாகும். அங்கு கட்டப்படும்  அனைத்து கட்டுமானங்களும் விதிமீறலாகும். எனவே, பேனா நினைவுச் சின்னம் அமைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏர்றுக்கொண்ட தீர்ப்பாயம், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.