பாரதப் பண்பாட்டுப் பாரம்பரியம் அலறும் உலகிற்கு அமுதம்

போன மாதம் இரு வெவ்வேறு தேசங்களில் மசூதியிலும் சர்ச்சிலும் நடந்த படுகொலைகளின் பின்னணி மதவெறி. ’என் மதம் உசத்தி – உன் மதம் மட்டம்’ என்ற மனப்பான்மை. இதன் பிடியில் சிக்கி அல்லல்படும் உலகிற்கு அமைதி தரக்கூடியது எது? படியுங்கள்.

நியூசிலாந்தில் கிரைஸ்ட்சர்ச் நகரில் மார்ச் 15 அன்று ஒரு மசூதியில் கண்மூடித்தனமாக வெள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில்  தொழுகைக்கு வந்த 50 பேர் பிணமானார்கள். 20 பேர் படுகாயம்.  சிதறிக் கிடந்த சடலங்கள், உறவினர்களின் கூக்குரல், கொலைகாரனின் தடயங்களை தேடும் புலனாய்வு, குற்றம் நடந்த பின்னணி குறித்த கேள்விகள் எல்லாமாக இதயத்தைப் பிழிந்தன. …   இது ஏதோ தனியானதொரு   சம்பவம் அல்ல.. மார்ச் மாத தொடக்கத்தில் நைஜீரிய நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  கிரைஸ்ட் சர்ச் மசூதிப் படுகொலை உலகை உலுக்கியது போல நைஜீரிய சம்பவம் அவ்வளவாக பேசப்படவில்லை.

அது என்ன நைஜீரிய சம்பவம்? நைஜீரியாவின் கஜுரி மாகாணத்தில் மாரோ மாவட்டத்தில் மதவெறி பிடித்த முஸ்லிம் குழு ஒன்று தாக்கியதில்  30 கிறிஸ்தவர்கள் பிணமானார்கள். மசூதியோ சர்ச்சோ,  தோட்டாக்கள் நியூசிலாந்திலும் பாய்ந்தன,  நைஜீரியாவிலும் பாய்ந்தன. சிதறிய பிணங்கள்தான் இரண்டு நாடுகளிலும் ஒரே காட்சி. உறவினர்களைப் பறிகொடுத்த குடும்பங்களைத் தேற்றிவிடலாம்.  பாய்ந்த தோட்டாக்களை கூட கணக்கெடுத்து விடலாம். அதோடு முடிந்ததா கதை?

ஐரோப்பிய பத்திரிகைகள் நைஜீரியப் படுகொலையை “சமூகங்கள் இடையேயான  வன்முறை” என்று வர்ணித்தன. நியூசிலாந்து படுகொலை “குடியேறிகள் மீதான நீண்ட நாள் காழ்ப்பு” என்றார்கள். ஆப்பிரிக்கப்    பழங்குடிகள் இடையே மோதல் என்றோ  குடியேறிகள் மீதான கோப வெளிப்பாடு என்றோ விளக்கம் அளிக்கிறார்களே, இதில் மசூதியும் சர்ச்சும் வந்தது ஏன்?

முன்பு அரசியல் அறிவியல் அறிஞர் சாமுவேல் பி. ஹண்டிங்டன் “நாகரீகங்களின் மோதல்”  (Clash of Civilisations) என்று வர்ணித்தார்  அல்லவா, ஒருவேளை அதுதானா இது? எல்லாமே உலகமயம் என்ற பேச்சு அடிபடும் போது இந்த இரண்டு சம்பவங்களையும் அங்கொன்று இங்கொன்றாக நடந்த தனிப்பட்ட   படுகொலைகள் என்று  ஒதுக்கிவிட முடியவில்லை.

சின்னாபின்னமான   சிரியா தேசத்திலிருந்து நாலாபுறமும் சிதறும் அகதிகள்  பட்டாளம், ஐரோப்பிய தேசங்களின் மக்கள் தொகையின்  தன்மையையே நிரந்தரமாகப்   புரட்டிப் போடுவதை சொல்வதா, பாரத நாட்டிற்குள் தலை தூக்கிய ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினையை சொல்வதா? தாங்கள் ஊடுருவி வியாபிக்கிற தேசத்தின் ஆதி கலாச்சாரங்களை விழுங்கித் தீர்த்து விடுகிற ’ஒரே தெய்வ’ தத்துவ  அலை என்று சொல்லுவதா?

அகதிகளின் பரிதாபக் கதையாகத் தொடங்கி அக்கிரமங்களின் கொடூரமாக பரிணமிப்பது எங்கு பார்த்தாலும் நடக்கிற கதை. இது விஷமாகப் பரவி வருகிறது.  இது இன்றைக்கு  புதிது. என்றாலும்  பழைய கதையின் தொடர்ச்சி தான்.

மனித குலத்தை இரண்டாக வகிர்ந்து கூறுபோடும் கண்ணோட்டத்தின் கதை இது. ’என் மதம் உசத்தி, உன் மதம் மட்டம்’ என்ற குறுகிய வாதத்தை முன் வைக்கும் இரண்டு போக்குகளின் மோதலில் பன்மைத் தன்மையில் நம்பிக்கை கொண்ட மதங்கள், தேசங்கள், வழிபாடுகள், நாகரீகங்கள் ஆகியவை சிக்கிக்கொண்டு நசுங்கி வருன்றன. ஐரோப்பா உள்ளிட்ட பல நாகரீகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயான தகராறு,  இஸ்லாம் தலையெடுத்த நாள் தொட்டே இருந்து வருவதுதான். ஆனால் இது பற்றி வாய் திறப்பதற்கு தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தயங்குவார்கள்.  சமூக அறிவியல்வாதிகளோ இதெல்லாம் தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஒதுக்கப் பார்ப்பார்கள்.  வரலாற்றாசிரியர்கள் இந்த பிரச்சினையை முழுமையான கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கு பதிலாக உதிரி சம்பவங்களாக வர்ணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அடுக்கடுக்காக இந்த சம்பவங்கள்  நடப்பதன் அர்த்தம் என்ன என்பதை  முழுமையான பார்வையுடன் விளக்குவது அவசியம்.

பாரதத்தை எடுத்துக்கொள்வோம். ஒரே தேசமாக இருந்தது. முஸ்லிம்களின்  இருதேச சித்தாந்தத்தால் தேசப் பிரிவினையின் சோக வரலாறு நம் கண் முன்னே நடந்தது. ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாடு தலைதூக்கி பழைய நாட்டின் பண்பாட்டையே நிர்மூலமாக்கும் இந்த துவேஷ  தத்துவத்தின் தொடக்கம் எது?

எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் நடந்த இஸ்லாமிய படையெடுப்பே  ஐரோப்பாவில் இஸ்லாத்தின் அறிமுகம் என்று சொல்லலாம். அதையடுத்து இத்தாலியின் சிசிலி பகுதி அரபி தாக்கத்திற்கு உள்ளானது.  பால்கன் தேசங்கள் எனப்படுகிற  அல்பேனியா,  பல்கேரியா,  ருமேனியா போன்ற பகுதிகளிலும் இஸ்லாம் காலூன்றியது.

இஸ்லாம் வாள் ஏந்தி படையெடுத்து பரவிய கட்டத்திற்கு அடுத்தபடியாக தொழில் புரட்சி  ஏற்பட்டது. பல தேசங்களும்  குறைந்த கூலிக்கு ஆட்களை தேடின.  கூட்டம் கூட்டமாக முஸ்லிம்கள் குடியேறினார்கள்.  பல ஆலைகளில் வேலை செய்தார்கள்.  ஆனால் ஒரே இடத்தில் குடியிருப்புகள் முளைத்தன.  முன்பின் தெரியா முஸ்லிம்களுக்கு  உள்ளூர் முஸ்லிம்கள்   அரவணைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. திட்டமிட்ட ஊடுருவல், ஒன்றாகக் கூடி வசிப்பது, மிக அதிக முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி — இவையெல்லாம் தொழிற்புரட்சி தொடங்கியபோதே ஐரோப்பா நெடுக பதிந்த இஸ்லாமிய பிரிவினைவாத அடிச்சுவடுகள். வந்தேறிய முஸ்லிம்கள் உள்நாட்டு சமுதாயத்தினருடன் கலக்காமல் தனித்தே வசிக்கும் போக்கு தொழிற்புரட்சி நடைபெறும்போதே ஐரோப்பாவில் காணப்பட்டது. ஆனால் அதை சமூக விஞ்ஞானிகள் கண்கொண்டு பார்க்கத் தவறி விட்டார்கள்.

விளைவு?  இன்று  ஐரோப்பாவின்  தெருக்களில்  “தேசத்தின் சட்டத்தை உடைப்பில் போடு, ஷரியா சட்டமே எங்களுக்கு வேண்டும்!” என்ற முழக்கம் கேட்கிறது. பொன்னிறக் கூந்தல் உள்ள நார்வே தேசத்துப் பெண்கள்  தெருவில் நடமாட  பயப்படுகிறார்கள். முஸ்லிம்கள் தாக்குவார்களாம். கூந்தலை கருப்பாக்கிக் கொள்கிறார்கள். பிரான்ஸ், பிரிட்டன், நார்வே தேசங்களில் அந்தந்த தேசத்து தேசியக்கொடியை எரிக்கிறார்கள்.    ரஷ்யாவின் தேசிய கீதம்     என்றால் முஸ்லிம்களுக்கு வெறுப்பு. அதில் ஒலிக்கிற மணியோசை சர்ச்சு மணியோசை போல இருக்கிறதாம்.

சிரிய முஸ்லிம் கூட்டங்கள் ஜெர்மனியில் செய்கிற ரகளையால் வெறுத்துப் போன ஜெர்மன் சான்ஸலர் (அதிபர்) ஏஞ்சலா மார்க்கல், முஸ்லிம்களின் பெயர் குறிப்பிடாமல் “ஐரோப்பாவில் பண்பாட்டுப் பன்மை (multi-culturalism) தத்துவம் தோற்றுவிட்டது” என்று பேசுகிறார். பண்பாட்டுப் பன்மை என்பது நம்மூர் அரசியல்வாதி பேசும் ’எம்மதமும் சம்மதம்’, ’மதசார்பின்மை’ போன்ற தளுக்கு வாதம். அது தோற்றுவிட்டது என்றால் அதன் மாற்று? மானுட சுதந்திரம், ஜனநாயகம் போற்றுவோம் என்கிறார் மார்க்கல். ஹாலந்து தேசத்தின் ப்ரீடம் பார்ட்டி, “சகிப்பின்மையை நாம் ரொம்ப சகித்துக் கொண்டிருந்துவிட்டோம். இனி ஹாலந்தில் நமக்கு ஹாலந்து கலாச்சாரம்தான் வேண்டும்.” என்று அறிவிக்கிறது. ஹாலந்துக் குழந்தைகளுக்கு ஹாலந்துப் பண்பாட்டை போதிக்கும் கல்வி தேவை என்பது ப்ரீடம் பார்ட்டியின் கருத்து. ’எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை’ என்று ஒரு காலத்தில் ஜம்பமடித்த பிரிட்டன் இப்போது புது ஆபத்தின் உதயத்தை சந்திக்கிறது. அதிரடியான கண்மூடித்தனமான இஸ்லாத்தை சமாளிக்க ஐரோப்பா ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்.  இன்னொரு முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்,  பிரிட்டனில் வசிப்பவர்கள் பிரிட்டிஷ் வாழ்க்கை விழுமியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற  விஷயத்தில் மாற்றுக் கருத்து இல்லை  என்கிறார்.

இதெல்லாம் ஐரோப்பாவின் கதை. ஆப்பிரிக்காவை எடுத்துக் கொண்டால், எடுத்துக் கொண்டால் அங்கே ’அல் ஷபாப்’ நடமாடுகிறது, ’போகோ ஹராம்’ நடமாடுகிறது. போகோ என்றால் மேற்கு என்று அர்த்தமாம்.  மேற்கின்  எல்லாமே அவர்களுக்கு ஹராம்.  மேற்கு உலகம் எந்த கதி அடைந்திருந்தாலும் மேற்கு ஹராம்தான்.  இன்றும் அரபி சொல்வது தான் அவர்களுக்கு சரி. பெண் குழந்தைகளை படிக்க அனுப்பக்கூடாது என்று கூறி 276 பெண் குழந்தைகளை ஒரு பள்ளியில் இருந்து கடத்திக் கொண்டு போனார்கள். அவர்களில் 219 பேர் கதி என்ன என்று இன்று வரை தெரியவில்லை.  எல்லாம் மதத்தின்  பெயர் சொல்லி நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?  உலகின் பல பகுதிகளிலிருந்தும் எழும்  கவலைக்  குரல் ஒன்று போல ஒலிக்கிறது அல்லவா?

வஹாபிய தீவிரத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலான குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன. பெல்ஜியத்தின் கொன்ராட் எல்ஸ்ட், வங்க தேசத்தின் தஸ்லிமா நஸ்ரீன், அமெரிக்காவின் பமேலா ஜைலர், கனடாவின் தாரிக் பதே, பாகிஸ்தானின் ஹசன் நிஸார், பாரதத்தின் துபைல் அகமதுவும் தாபிஷ் சித்திக்கியும், போன்ற பலர். இவர்களிடையே தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் வெவ்வேறு நாடுகளில் தலை தூக்கும் முஸ்லிம் இரு தேச வாதத்தையும் மதவெறியையும் இவர்கள் பார்க்கும் விதமே அலாதி. இஸ்லாத்தை வஹாபியர்கள் எவ்வளவு விசையோடு பரப்புகிறார்களோ அதன் மீதான விமர்சனமும் அதே தீவிரத்துடன் வேகமெடுக்கிறது.   உலகம் நெடுக பரவும் மதவெறியை கண்டனம் செய்வது மட்டும் தீர்வு அல்ல. அப்படியானால் வேறு எது?

மனிதகுலத்தை ஒரு குடும்பமாக, ஆன்ம நேயத்துடன் பார்க்கிற ’ஏகாத்ம மானவ தரிசனம்’ என்னும் கருத்தியல் காட்டும் பாதையில் முன்னேறுவதுதான் தீர்வை அடையும் வழி. நம் முன்னோர் அந்தப் பாதையைத்தான் ஏற்றெடுத் தார்கள். எனவே அது நமது பண்பாட்டுப் பாரம்பரியம். பாரதம் தரும் நமது பண்பாட்டுப் பாரம்பரியம்தான், மதவெறி-வன்முறை இருளில் சிக்கித் திண்டாடும் உலகிற்கு புது விடியலாக அமையும்.