பத்மநாப சுவாமி ஆராட்டு ஊர்வலம்

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடப்பு ஆண்டு ஐப்பசி திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரக வாகனங்கள் ஆராட்டு ஊர்வலமாக சென்றன. விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விமான நிலையம் 1932ல் ஆராட்டு ஊர்வலப் பாதையின் குறுக்கே அமைந்தது. அப்போது முதலே வருடம்தோறும் ஆராட்டு ஊர்வலத்துக்கு வசதியாக, ஊர்வல நேரத்தில் விமான ஓடு தளம் மூடப்பட்டு வருகிறது. ஊர்வலம் விமான ஓடுபாதையில் வரும்போது இரு புறமும் விமான நிலையம் சார்பில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் நின்று பாதுகாப்பு தருவார்கள். இது குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் கொடுக்கப்படும். ஆராட்டு ஊர்வலத்தில் திருவிதாங்கூர் ராஜவம்சத்தின் தற்போதைய தலைவர் ஆதித்யவர்மா வாளுடன் முன்னால் செல்லும் சம்பிரதாயமும் உண்டு.உலகிலேயே கோயில் விழாவுக்காக ஒரு விமான நிலையத்தை 5 மணிநேரம் மூடிவைக்கும் நிகழ்வு திருவனந்தபுரத்தில் மட்டுமே நடக்கிறது.