சீனாவில் பரவும் நிமோனியா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருவதையடுத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர ஆலோசனை கடிதத்தை எழுதியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சீனாவில் பரவி வரும் நிமோனியா வைரஸ் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த வகைவைரஸ் அதிகளவில் குழந்தைகளிடம் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீனாவில் பொது சுகாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இதனை உணர்ந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை முடுக்கி விட வேண்டும். பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை போதுமான அளவில்கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நிமோனியா காய்ச்சல் காரணமாக கடுமையான சுவாச பிரச்சினைக்கு ஆளாவோரை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட மற்றும் மாநில கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் தற்போதைய நிலையில் நிமோனியா குறித்தஅச்சுறுத்தல் எதுவும் இல்லைஎன்றாலும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க மாநிலங்கள் நிலைமையை தொடர்ந்துஉன்னிப்பாக கண்காணிப்பது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.