சாதுவை கொலை செய்த மர்ம நபர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்ரவாலி கிராமத்தில் சேத்தன் தாஸ் என்ற ஒரு சாது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. கடந்த புதன்கிழமை காலை அவரது குடிசைக்கு வெளியே அவரது சடலம் கிடப்பதை கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.  காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாது சேத்தன் தாஸ் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். எனினும், பக்ரவாலி கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வந்தார். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுடனும் நல்ல உறவை பேணினார். அவருக்கு யாருடனும் சண்டையோ சச்சரவுகளோ இல்லை. கிராம மக்கள் அவருக்கு உணவு மற்றும் பிற பொருட்களை அடிக்கடி வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. கொலை செய்த மர்ம நபர்களை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய பக்ரவாலி கிராம மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.