கேதார்நாத் பத்ரிநாத் வளர்ச்சி திட்டங்கள்

உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களின் மேம்பாட்டில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அவரது முயற்சியால் கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கேதார்நாத் கோயில் வளாகத்தில் மருத்துவமனை, புதிய பாலம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்படுகின்றன. பத்ரிநாத் கோயில் வளாகத்தில் “பத்ரிநாத் மாஸ்டர் பிளான்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புனித தலங்களின் மேம்பாட்டு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி டுரோன்கள் மூலம் ஆய்வு செய்தார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநில தலைமைச் செயலாளர் ஆகியோர் காணொலி வாயிலாக திட்டப் பணிகளின் நிலை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி, “வரும் காலத்தில் கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதை கருத்தில் கொண்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். புனித தலங்கள் மட்டுமன்றி, சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்.