காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்காதீர் – பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று பாகிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது.

மேலும், சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ்(பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசினார்.

அப்போது, ” ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது. ஆனால், காஷ்மீரில் ரத்தக் களறியாக இருக்கிறது. துப்பாக்கி குண்டு சத்தமும், வெடிகுண்டுகள் வெடிக்கும் சூழலும் நிலவும் ஆப்கானிஸ்தானில்கூட அமைதி வந்துவிட்டது, ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமைதி வரவில்லை என்று மறைமுகமாக குறிப்பிட்டு ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு சமீபத்தில் ரத்து செய்துவிட்டதாக செய்தி கிடைத்தது.அங்கு மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம்.  இதனால் முஸ்லிம் மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சில கட்சிகள் ஆப்கானிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்துப் பேசுகிறார்கள். இது ஒருபோதும், அங்குள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவாது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீருக்குத் தொடர்பில்லாதது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் மேடையாக ஆப்கானிஸ்தானை மாற்றக்கூடாது”.

இதையடுத்து காஷ்மீர் பிரச்னையை ஆப்கானிஸ்தானுடன் இணைத்து பேசிய பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார் தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்.