காங்., ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடிப்பார்கள்: மோடி பேச்சு

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ரேபரேலி மக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார், இதைக் கேட்ட சமாஜ்வாதி கட்சியின் இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது, கண்ணீர் மட்டும் வெளியே வரவில்லை.

அவரது மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் கரைந்தன. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்; குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்.
புல்டோசர்களை எங்கு ஓட்ட வேண்டும், எங்கு ஓட்டக்கூடாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் டியூசன் பயில வேண்டும். ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் இப்போது நான் வெளிநாடுகளுக்குச் சென்று பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை; உ.பி., மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசுகளுக்காக 5, 6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.