எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் அதிகாரிகள் கண்டனம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி அந்த விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட சுமார் 20 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதற்கு, முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 270 பிரபலங்கள், ‘புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா, பாரதத்துக்கும் பாரத சமுகத்தினருக்கும் பெருமைமிக்க தருணம்’ என்ற தலைப்பில் கையெழுத்து பிரச்சாரம் நடத்தி அதன் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் தூதர் பஸ்வதி முகர்ஜியின் தலைமையில் இதில் பங்கு பெற்றவர்களில் 88 ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், 10 முன்னாள் தூதர்கள், 100 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், 82 கல்வியாளர்கள் அடங்குவர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “அக்கறையுள்ள பாரத குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகமற்ற எதிர்க்கட்சிகளை கண்டிக்கிறோம். பாரத நாட்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் துணை நிற்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்நிகழ்வை புறக்கணித்து எதிர்கட்சியினர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வீணானது, முதிர்ச்சியற்றது, கேலிக்கூத்தானது, ஜனநாயக மற்றது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பாரதப் பிரதமர், தனது தொலைநோக்கு வியூகத்தால் கோடிக்கணக்கான பாரத மக்களின் மனதை கவர்ந்துள்ளார். இது காங்கிரஸ் மற்றும் இதர எதிர்கட்சியினருக்கு வெறுப்பாக உள்ளது. 2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையை புறக்கணித்தவர்கள்தான், இன்று அவரே புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என கூறுகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.