இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல்; ஜூலை 11க்கு ஒத்திவைப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்யுத்த வீராங்கனை களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம். பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா, போகட், சாக்ஷி மாலிக், சத்யவர்த் காடியான் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு அளித்தவாக்குறுதியை ஏற்று, அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம் மேளனத் தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் மகாராஷ்டிரம், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஹிமாசல பிரதேச மாநில மல்யுத்த சங்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன.அந்த சங்கங்களின் இணைப்பு அங்கீகாரத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ரத்து செய்தது.

அந்த சங்கங்கள் தங்களுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஐஓஏ அமைத்த குழுவை அணுகியது.இதுதொடர்பாக அக்குழு அந்த சங்கங்களிடம் புதன் கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது அந்த சங்கங்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில், அவற்றின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி, அந்த முடிவு சரிதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளன பிரதிநிதிகள் வாதிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க ஐஓஏ அமைத்த குழுவுக்கு அவகாசம் தேவைப்படுவதால், இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் ஜூலை 11-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவவறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.