இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.9% வளரும்: கணிப்பை உயர்த்தியது ஐ.நா.

கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்தியாவில் பொது முதலீடு மற்றும் தனிநபர் நுகர்வு காரணமாக பொருளாதாரம் வளர்ந்து வருகிற நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 6.2 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக ஐ.நா. உயர்த்தியுள்ளது.
அதேபோல், 2025-ம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நுகர்வு விலை பணவீக்கம் 2023-ல் 5.6 சதவீதமாக இருந்த நிலையில் 2024-ல் 4.5 சதவீதமாக குறையும் என்று தெரிவித்துள்ளது.
தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் சற்று மீண்டு வருவதாக குறிப்பிட்டிருக்கும் ஐ.நா.,பணவீக்கம் காரணமாக ஆப்பிரிக்கநாடுகளில் வளர்ச்சி சுணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019 முதல் இதுவரை 400 சொத்துகளை முடக்கிய என்ஐஏ
கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, தேசிய அளவிலான தீவிரவாத வழக்குகளை விசாரித்து வருகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கி வருகிறது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சொத்துகளை என்ஐஏ முடக்கி உள்ளது.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: என்ஐஏ அமைப்பின் ராஞ்சி பிரிவு, பிஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த பிரிவு சார்பில் அதிகபட்சமாக 208 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதற்குஅடுத்தபடியாக ஜம்மு பிரிவு சார்பில் 99 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சண்டிகர் பிரிவு 33, கொச்சி பிரிவு 27 சொத்துகளை முடக்கி உள்ளன. இதில் பெரும்பாலானவை, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவை ஆகும்.
டெல்லி என்ஐஏ பிரிவு சார்பில் 22, மும்பை பிரிவு சார்பில் 5, ஹைதராபாத் பிரிவு சார்பில் 4, சென்னை பிரிவு சார்பில் 3 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.