ஆப்கன் யார் வசம்?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அமெரிக்கப் படைகள் அமெரிக்க திரும்பி செல்லும் பணிகள் தொடங்கி பெரும்பாலான வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்ட பகுதிகளில் தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபானின் தூதுக்குழு, ஏற்கெனவே மொத்தமுள்ள 350 மாவட்டங்களில் 290 மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாக தெரிவித்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லை பகுதியை முழுமையாக கைப்பற்றி அங்கிருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர். இதனை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய பிறகு அது பயங்கரவாதிகளின் மையமக அமையாது குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட விடமாட்டோம் என தாலிபான் தூதுக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து ஆப்கானிஸ்தானின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர், தாரிக் ஏரியான் கூறும்போது, தாலிபான் அமைப்பு கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒரு சிலப் பகுதிகளில் மட்டுமே தாலிபானின் ஆதிக்கம் உள்ளது. அந்த பகுதிகளை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆப்கான் அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.