அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு கமிட்டியின் உறுப்பினரான அஸ்லே டோஜே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று ( வியாழக்கிழமை) தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி உள்ளார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி. நம்பகமான தலைவர்.

பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும் வளர்ந்து வருகிறது . பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று கூறினார்.

அஸ்லே டோஜே

2018 ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது, சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உலகப் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது, உலகில் விரைவாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி காணும் இந்திய மக்களின் திறன் மேம்பாட்டினைத் துரிதப்படுத்துவது, ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக நல்லிணக்க முயற்சிகளின் மூலம் ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்துவது ஆகியவற்றில் மோடியின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமாக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக சியோல் அமைதி குழு தெரிவித்தது.