அடிமை மனநிலையில் இருந்து விடுதலை

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலிலும் பத்ரிநாத் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “மணா கிராமம், பாரதத்தின் கடைசி கிராமமாக கருதப்பட்டது. ஆனால், இனிமேல், எல்லை பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், பாரதத்தின் முதன்மையான கிராமமாக கருதப்படும். கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ளதைநான் கௌரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். கேதார்நாத்தில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டம் யாத்ரிகர்களின் பயண நேரத்தை குறைக்கும். கேதார்நாத்தில் கடவுள் சிவனின் ஆசி பெற்றேன். கௌரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலும், கோவிந்த் கட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் வரையிலுமான ரோப்கார் திட்டம் காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். முந்தைய அரசுகள் தங்கள் சுயநலத்திற்காக பணியாற்றின. பாரதம், அடிமை மனநிலையில் சிக்கி தவித்தது. முந்தைய அரசுகளும் நமது நாட்டை அடிமைத்தனத்தில் சிக்க வைத்தன. பா.ஜ.க ஆட்சியில் அடிமை மனநிலையில் இருந்து தேசத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளும் உள்நாட்டு பொருட்களை வாங்க 5 சதவீதம் செலவழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என கூறினார்.