தேசிய பிரவாகத்தை நோக்கி கிறிஸ்தவர்கள்

சென்ற மாதம் (ஏப்ரல் 26 அன்று) பாரதத்தின் தலைநகர் தில்லியில் ஒரு புதிய முயற்சி அரங்கேறியிருக்கிறது.

ஆம், சமூகத்தில் பிரபலமான கிறிஸ்தவ மத தலைவர்களும், புகழ்பெற்ற பல துறை பெரியோர்களும் தேசியமும் தெய்வீகமும் இரு கண்ணென கொண்டு நாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வாம்சேவக சங்க முன்னோடி உறுப்பினர்களும் பங்கு கொண்ட ஓர் இனிய விழா தான் அது. இந்த விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் தேசிய சுயாதீன பிஷப்ஸ் கவுன்சில் ராஷ்ட்ரீய  ஈசாயி (கிறிஸ்தவ) மஹாசங்கம் என்ற இரண்டு அமைப்பினர்.

ராஷ்ட்ரீய  ஈசாயி (கிறிஸ்தவ) மஹா சங்கத்தினை துவக்கியவர் டாக்டர் அனிதா பெஞ்சமின். இவர் பல நற்பணிகள் புரிந்து வரும் தன்னார்வலர். இந்த பெண்மணி  2018ல் உலக சமாதான விருதும் சர்வதேச இயக்குனருக்கான மனித நேயர் விருதும் பெற்றவர்.   வழங்கியவர்கள்  அமெரிக்காவின்  உலக  அமைதி  அகாடமி.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஸ்டர் பெருநாளன்று இலங்கையில் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த முந்நூற்றிற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் ஆன்மா நற்கதி அடைய சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

விழாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற் குழு உறுப்பினரும் ராஷ்ட்ரீய முஸ்லிம் மன்ச்சின் புரவலருமான  பேராசிரியர் இந்திரேஷ் குமார் உரையாற்றி சிறப்பித்தார். கிறிஸ்தவர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே பகை உணர்வு நீங்கி ஒற்றுமை உணர்வு  ஒங்க வேண்டும் என்றார். அதற்கு இத்தகைய  நல்ல முயற்சிகள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

விழாவில் கலந்துகொண்ட இன்னொரு பிரபலஸ்தர் டாம் வடக்கன். காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில்  பா.ஜ.கவில் இணைந்தவர். அவர் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், “நான் காங்கிரஸ் கட்சியின் குறுகிய மதவாதம்  பிடிக்காததால்தான் அங்கிருந்து விலகினேன்” என்றார்.  பேராயர் மார்ட்டின் கட்ரட்சா, பேராயர் மத்தியாஸ், டேனியல், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

16 மாநிலங்களிலிருந்து  8,400 திருச்சபைகளின் பிரதிநிதிகளாக எட்டு பேராயர்கள், 60 ஆயர்கள், 35 மதச்சார்பற்றவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

One thought on “தேசிய பிரவாகத்தை நோக்கி கிறிஸ்தவர்கள்

Comments are closed.