உலகம் உவந்து ஏற்கும் ஹிந்து மதம் ஜெர்மன் பக்தை ஜமாய்க்கிறார்!

ஹிந்து மதத்தைப் பற்றி ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசியதில் தெரிந்து கொண்டேன். சனிக்கிழமை கோவிலுக்கு சென்றபோது அந்த காட்சி கிடைத்தது. அசல் குஷ்புவுக்கு சித்தப்பா பெண் ஜாடையில் ஜெர்மன் பெண் ஒருவர் சேலைகட்டி நின்றுகொண்டிருந்தார், அம்மணி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாம், ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்களாம். அவரின் உடன் இருக்கும் அந்த பக்தைகள் பிரேசில், பெல்ஜியம், பிரிட்டன், இன்னபிற நாடுகள். அந்த ஜெர்மன் பெண்ணிடம் கத்தோலிக்க மதத்தில் இருந்து எப்படி ஹிந்து தர்மத்துக்கு வந்தார்களாம்? எனக் கேட்டேன்.

“கிறிஸ்தவம் ஒரு கட்டளையிடும் மதம், இதோ கிறிஸ்து, அவரை விசுவாசி இல்லை என்றால் நமக்கு நரகம் என்பதை தவிர ஒன்றுமில்லை. ஹிந்து மதம் மிக சுதந்திரமான மதம். பாவம் செய்யாதே என சொல்லும், ஆனால் பாவம் செய்தால் மறுபடி மறுபடி பிறந்து பாவத்தை தொலைக்க அது வாய்ப்பளிக்கும். ஹிந்துமதம் என்பது அறிவியலும் உளவியலும் ஆன்மீகமும் கலந்த புள்ளி, அதில் நின்றால் உடல் கெடாது, மனம் கெடாது, உள்ளம் கெடவே கெடாது. நாங்கள் ஐரோப்பியர்கள். எல்லாம் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட நாட்டின் மக்கள், எங்களுக்கு இதுதான் மிக பொருத்தமாக இருக்கின்றது, இம்மதம் யாரையும் காயப் படுத்தாதது அதன் மகா சிறப்பு.”

ஹிந்துமதத்தில் சாதி உண்டே? உங்கள் நாட்டில் அந்த வர்ணாசிரம தத்துவத்தை எப்படி பின்பற்றுகிறீர்கள் என கேட்டதும் அம்மணி சிரித்துவிட்டார். “அது ஒரு காலத்தில் யூதமத கட்டுப்பாடு போல இங்கும் இருந்திருக்கலாம், காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது. இதோ நாங்கள் ஹிந்துக்கள், ஆனால் ஜாதி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது அவசியமுமில்லை, எனக்கு தெரிந்து இந்த வார்த்தை உங்கள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயன்படுமே அன்றி உண்மையான, பாமர ஹிந்துக்களுக்கு அல்ல‌” என்றார்.

எங்கள் நாட்டில் பலர் ஹிந்துக்களில் இருந்து கிறிஸ்தவராய் மாறும் பொழுது பலர் மாற்ற படாதபாடு படும்பொழுது உங்கள் நாட்டில் நிலை என்ன என கேட்டேன். அம்மணி இப்படி சொல்லிற்று: “உங்கள் நாட்டில் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களாய் மாறும் வேகத்தில் எங்கள் நாட்டில் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களாய் மாறிவருகின்றனர். நாளையே இந்தியா கிறிஸ்தவ நாடானாலும் நாளை மறுநாளே அது மறுபடி ஹிந்து நாடாகும் அதில் சந்தேகமில்லை. வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் அது.”

சென்று வருகின்றேன் என கிளம்பும்பொழுது இந்திய பாணியில் வணங்கி ஹரே கிருஷ்ணா என அவர்கள் சொல்லும் பொழுது இனம்புரியா மகிழ்வொன்று வந்து சென்றது. பகவான் கண்ணன் அப்படியான இடத்தை உலகில் பெற்றிருக்கின்றான், அவனை உணர்ந்து கொண்ட பக்தைகள் அவனை உலகில் எல்லா மூலையில் இருந்தும் வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்.

நாஸ்டர்டாமஸ் சொன்னபடி ஐரோப்பா உலகின் மிக பழமையான மதத்தை ஒரு காலத்தில் ஏற்றே தீரும் என்பது தெரிகின்றது கண்ணனும் ராமனும் அவர்களை அப்படி ஆட்கொள்கின்றார்கள்.

One thought on “உலகம் உவந்து ஏற்கும் ஹிந்து மதம் ஜெர்மன் பக்தை ஜமாய்க்கிறார்!

  1. இந்துவாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம்

Comments are closed.